วันศุกร์ที่ 28 สิงหาคม พ.ศ. 2552

இலங்கையில் விரைவில் அதிகாரப் பகிர்வு : அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

இலங்கையில் விரைவில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இந்திய இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத் திட்டமொன்றை நோக்கிய முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரப் பகிர்வின் மூலம் மட்டுமே நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் எனவும், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் எனவும் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் இந்திய ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.வெளிநாடுகளில் உள்ள இந்திய ஊடகவியலாளர்களுக்கும் ரொபர்ட் ஓ பிளேக்குக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.இதன்போது, மனிதாபிமான நிலவரம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய இரண்டு முனைகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.ரொபர்ட் ஓ பிளேக் மேலும் தெரிவிக்கையில், "இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 250,000த்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் சுதந்திர நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர் மக்களை மீளக் குடியமர்த்துவதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியை நாம் வரவேற்கின்றோம். இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு சர்வதேச தரத்திற்கு அமைவாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் விரிவான முறையில் கலந்தாலோசித்து பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். ஜனாபதித் தேர்தலுக்கு முன்னர் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாது என்ற ஜனாதிபதியின் கூற்று தொடர்பில் நாம் கவலை அடைகின்றோம். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம் குறித்த நடவடிக்கைகள், காலம் தாழ்த்தாது எடுக்கப்பட வேண்டும்" எனச் சுட்டிக்காட்டினார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น