วันเสาร์ที่ 29 สิงหาคม พ.ศ. 2552

வடக்கில் முன்னர் வாழ்ந்த மக்களே குடியேற்றப்படுவர்; சிங்களவர் குடியேற்றப்படார் : ஊடகத்துறை அமைச்சர்


வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்" என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெள்ளியன்று தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கருத்து ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பொறாமை மற்றும் வைராக்கியம் காரணமாகவே இவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் தெரிவித்துள்ள தகவல்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது. வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள். உண்மையில் அதுதானே செய்யவேண்டிய வேலை? அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். மாறாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறுவது போன்று புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் எந்த திட்டங்களும் எமக்கு இல்லை என்பதனை திட்டவட்டமாக கூறுகின்றேன். அதேபோன்று வன்னி மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்புக்களை அபகரிக்கும் எந்தவிதமான எண்ணமும் இல்லை என்பதனையும் தெரிவிக்கின்றேன்" என்றார்.மீள் குடியேற்றம் குறித்து மங்கள சமரவீர... வியாழனன்று நடைபெற்ற ஊடகவையலாளர் மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், "மன்னார் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் இதுவரையிலும் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 50 சிங்கள குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது விடயம் உண்மையா எனத் தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அரசிடமே வினா எழுப்புகின்றோம். மேலும் இப்பகுதிக்கான மீள்குடியேற்றத்தில் 15 சிங்கள குடும்பங்கள், 15 தமிழ் குடும்பங்கள், 15 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்ற உள்ளதாகவும் மேலும் அங்கு இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சூழ்ச்சி போன்றதே" என்று குறிப்பிட்டிருந்தார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น