วันพฤหัสบดีที่ 24 กันยายน พ.ศ. 2552

போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் எரித்திரியாவிடம் 10 விமானங்கள் கொள்வனவு : உயர் பாதுகாப்பு அதிகாரி


இறுதிக் கட்ட யுத்த முன்நகர்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சுமார் 10 இலகுரக விமானங்களை எரித்திரியாவிடமிருந்து கொள்வனவு செய்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் புலிகள் இந்த விமானங்களைக் கொள்வனவு செய்த போதிலும், எதிர்பாராத விதமாக யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகங்களாக பிரித்து கப்பலின் மூலமாக இலங்கையின் வடகிழக்கு கடற்கரையின் ஊடாக குறித்த விமானங்கள் விநியோகிக்கப்பட இருந்ததாகவும், யுத்தத்தில் புலிகள் அடைந்த தோல்வி காரணமாக குறித்த விமானங்கள் விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானங்கள் கிடைக்கும் பட்சத்தில், மலேசியா, இந்தோனேசியா நாடுகளிலுள்ள பயிற்சி நிலையங்களிலிருந்து விமானிகளை வரவழைக்கவும் புலிகள் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

போர் முடிவுற்ற காலகட்டத்தில், முல்லைத்தீவுக் காட்டுப் பகுதியில் விமான பயிற்சி நிலையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 12 பேருக்கு விமானிப் பயிற்சி வழங்கப்பட்ட தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர் எனவும் ஏனையோர் இடம்பெயர் முகாம்களில் ஒளிந்திருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் எரித்திரியாவில் தூதரகமொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமே இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น