วันจันทร์ที่ 28 กันยายน พ.ศ. 2552

ஜேர்மனிய பொதுத் தேர்தலில் அஞ்ஜெலா மெர்கல் மீள வெற்றி

ஜேர்மனிய பொதுத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் அஞ்ஜெலா மெர்கல் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது அரசாங்கத்தைப் பலப்படுத்தும் வகையில் லிபரல் பிறீ டெமோகிரட்ஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

அவரது ஆளுங்கட்சி கூட்டமைப்பின் முன்னாள் பங்காளரான சமூக ஜனநாயகக் கட்சியானது கடந்த சில தசாப்த காலங்களாக மோசமான தேர்தல் பெறுபேறுகளைச் சந்தித்து வருகிறது.

தேர்தல் வெற்றியையடுத்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அஞ்ஜெலா மெர்கல், ஐரோப்பாவின் மாபெரும் பொருளாதார வளம்மிக்க நாடாக ஜேர்மனியை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

நெருக்கடி மிக்க சூழ்நிலையில் அனைத்து ஜேர்மனியர்களின் அதிபராக பதவியேற்க விரும்புவதாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஜேர்மனியர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதே தனது உயர்ந்த இலட்சியம் எனவும் அவர் கூறினார்.

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அஞ்ஜெலா மெர்கலின் மத்திய வலதுசாரி கூட்டமைப்பு 33 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள அதேசமயம், சமூக ஜனநாயக கட்சி 23 சதவீத வாக்குகளையும் பீறீ டெமோகிரட்ஸ் கட்சி 15 சதவீத வாக்குகளையும் இடதுசாரி கட்சி 12 சதவீத வாக்குகளையும் கிறீன்ஸ் கட்சி 10 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன.

இந்நிலையில் மெர்கலின் கட்சியும் பிறீ டெமோகிரட்ஸ் கட்சியும் கூட்டிணையும் பட்சத்தில் 48 சதவீத வாக்குகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்குமிடையிலான உறவுகள் மென்மேலும் வலுவடைய அஞ்ஜெலா மெர்கலின் தேர்தல் மீள் வெற்றி களம் அமைத்துத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น