วันอังคารที่ 1 กันยายน พ.ศ. 2552

வறட்சியை சமாளித்துவிட முடியும் என்கிறார் மன்மோகன் சிங்


இந்தியாவின் பொருளாதார சூழ்நிலை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், உலக அளவிலான பொருளாதார மந்த நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், வறட்சியையும் எளிதில் சமாளித்துவிட முடியும் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் மத்திய திட்டக்குழுவின் கூட்டம் இன்று, மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசும்போது, இந்தியப் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வறட்சியின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், முக்கியத் திட்டமான தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், மற்ற திட்டங்களுடன் இணைத்து அமல்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
முதலீடுகளை அதிகரிக்கச் செய்ய, குறிப்பாக, கட்டுமானத் துறையில் முதலீடுகளை அதிகரிக்க, தனியார் துறையுடன் இணைந்த கூட்டுத் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உலக அளவிலான பொருளாதார தேக்க நிலை, வளரும் நாடுகளுக்குத் தேவையான வளங்களைப் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், கடந்த 2008-2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2009-2010 இல் 6.7 சதவீதத்திலிருந்து 6.3 சதமாகக் குறையும் என்றும் திட்டக்குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น