วันพฤหัสบดีที่ 1 ตุลาคม พ.ศ. 2552

வவுனியா பதில் வைத்திய நிபுணர் டாக்டர் உமாகாந்த்தை தாமதமின்றி விடுதலை செய்யுமாறு கோரிக்கை


வவுனியா பொது வைத்தியசாலையில் பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய வைத்திய நிபுணர் டாக்டர் உமாகாந்த் புதன்கிழமை இரவு வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காகக் கூட்டிச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கைது செய்யப்பட்டதை அரச வைத்தியர் சங்க வவுனியா கிளையின் பேச்சாளர் ஒருவர் உறுதி செய்தார்.

அத்துடன், பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய இவரை அவரது பதவி நிலைக்கு ஏற்ற வகையில் நடத்த வேண்டும் என்றும், மேல் படிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்வதற்காக இருக்கும் அவரது தொழில் முன்னேற்றத்திற்குப் பாதகம் ஏற்படாத வகையில் விசாரணைகளை விரைவில் மேற்கொண்டு அவர் மீது குற்றமின்றேல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச வைத்தியர் சங்கம் கோரிக்கை விடு்ப்பதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

வைத்திய நிபுணர் உமாகாந்த் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக தமது தாய்ச் சங்கத்தின் கவனத்திற்கும் தாங்கள் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น