கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்நாட்டிலே இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய பாவ காரியத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது.
கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும். ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது.
எனவே அனைத்து தரப்பினரும் தங்களது வழமையான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு எதிர்வரும் புதன்கிழமை 4ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.
மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மாகாணசபை உறுப்பினருமான எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น