
போர்ட் ஆப் ஸ்பெயின்: அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து மிகச் சிறப்பானது. வித்தியாசமானது. நான் சென்ற விருந்துகளிலேயே மிகச் சிறந்தது இதுதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டித் தள்ளியுள்ளார்.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த மன்மோகன் சிங்குக்கு, அதிபர் ஒபாமா டின்னர் வைத்துக் கெளரவித்தார். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அறுசுவை விருந்து, கலை நிகழ்ச்சிகள், பாடல்கள், ஆடல்கள் என அமர்க்களப்படுத்தி விட்டனர் ஒபாமா தம்பதியினர்.
இந்த நிலையில் போர்ட் ஆப் ஸ்பெயின் வந்த மன்மோகன் சிங்குக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் வரவேற்பு அளித்தது. அப்போது மன்மோகன் சிங் பேசுகையில், வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது, வித்தியாசமானது. மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தனர். பிரமிக்க வைத்து விட்டனர். அந்த சூழலும், சாப்பாடும் மிகச் சிறப்பானவை.
நான் சந்தித்த விருந்துகளிலேயே மிகவும் சிறந்தது இது என்று கூறலாம். அந்த அளவுக்கு அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷல் ஒபாமாவும் ஏற்பாடு செய்திருந்தனர். இதுவரை நான் இப்படி ஒரு விருந்தில் கலந்து கொண்டதில்லை.
அமெரிக்காவின் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அதில் கலந்து கொண்டது சிறப்பு வாய்ந்தது. அனைவரையும் ஒரே இடத்தில் என்னால் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்களில் பலர் இந்திய வம்சாவளியினர் என்பதை என்னைப் பெருமை கொள்ளச் செய்தது என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரதமர்.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น