วันเสาร์ที่ 28 พฤศจิกายน พ.ศ. 2552

பிரபாகரன் பேனர்கள் அகற்றம்- வைத்தவர்கள் மீது நடவடிக்கை - டிஜிபி தகவல்


சென்னை: பிரபாகரன் படம், பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் மாவீரர் தினம் அனுசரிக்கும் போது வைக்கப்பட்ட பிரபாகரன் படங்கள் அகற்றப்பட்டு மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர்கள் தினத்தையொட்டி பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காவல்துறை நிபந்தனைகளை மீறி ஈரோட்டில் பிரபாகரன் படத்துடன் கூடிய போர்டுகள், பேனர்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. அவற்றை காவல்துறையினர் அகற்றினார்கள்.

இது தொடர்பாக பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் குமரகுருபரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் விடுதலைப்புலிகளின் கொடியை ஆலமரத்தில் ஏற்றி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வாசகங்கள் வைத்திருந்தனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர். இலங்கை அகதிகள் கண்ணன் என்கிற சிவக்குமார், நிசாந்தன் மற்றும் செல்வா என்கிற செல்வக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் 9 பேர் கைது...

இதற்கிடையே, ஈரோட்டில் பிரபாகரனுக்கு ஆதரவாக பேனர் வைத்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பரவலாக பல இடங்களில் பிரபாகரன் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனர்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதன் எதிரொலியாக சென்னையில் உள்ள இளங்கோவனின் வீடு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்த நிலையில், பேனர்கள் வைத்த மோகன்ராஜ், வடிவேல், சண்முகம், மோகன், பலிப்பாண்டி, உமாபதி, ஹரிகுமார், சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น