
இந்தியாவின் 61ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலை நகரம் டில்லியில் மத்திய அரசு சார்பில் செங்கோட்டையில் குடியரசு தின விழா நடந்தது.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இராணுவம் மற்றும் பொலிஸ் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் வீர தீர செயல் புரிந்த இராணுவ வீரர்கள், பொலிசாருக்கு 'அசோக் சக்ரா' மற்றும் 'கீர்த்தி சக்ரா' விருதுகளை வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பல்வேறு விருதுகளையும் அவர் வழங்கினார்.
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக தென் கொரிய அதிபர் லீமியூங் கலந்து கொண்டார்.
துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் மத்திய மந்திரிகள், இராணுவ தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இராணுவம், பொலிஸ் மற்றும் என்.சி.சி. படையினர் அணிவகுப்பு நடந்தது. நாட்டின் வலிமையைத் தெரிவிக்கும் வகையில் இராணுவத்தின் நவீன ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், அணிவகுப்பு என்பன நடந்தன. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்தின் அலங்கார வாகன அணிவகுப்பு நடந்தது. கலைக்குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழா நடந்த செங்கோட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அங்கு மட்டும் 15 ஆயிரம் பொலிசாரும், அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அணிவகுப்பு நடந்த 8 கிலோ மீட்டர் தூர பாதை முழுவதும் எங்கு பார்த்தாலும் பொலிசார் நின்று கொண்டிருந்தனர். இராணுவ ஹெலிகொப்டர்கள் வானத்தில் பறந்தபடி அந்தப் பகுதியைச் சுற்றி வந்து கண்காணித்தன. 105 கண்காணிப்பு கெமராக்களை வைத்து அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர்.
தீவிரவாதிகள் வான்வெளித் தாக்குதல் நடத்தலாம் எனக் கருதப்பட்டதால் ஆங்காங்கே விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
குடியரசு தினத்தையொட்டி டில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அஞ்சலி செலுத்தினார்
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น