วันพุธที่ 27 มกราคม พ.ศ. 2553

என்னைக் கைது செய்ய திட்டம் : சரத் பொன்சேகா


கொழும்பு நகரில் தான் தங்கியுள்ள விடுதியைச் சுற்றி பெருமளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தன்னைக் கைதுசெய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்திருப்பதாக பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியுள்ள விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுபற்றி இராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறுகையில், பொன்சேகாவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.

இராணுவப் பணியைப் பாதியில் விட்டுச் சென்றவர்கள் உட்பட சுமார் 400 பேருடன் சரத் பொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

"அவர்களது எண்ணம் என்ன என்பது தெரியவில்லை. பாதுகாப்புக் கருதியே அங்கு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஹோட்டலுக்கு உள்ளே செல்வோரும், வெளியே வருவோரும் பரிசோதிக்கப்படுகிறார்கள்'' என்றும் உதய நாணயகார தெரிவித்தார்.

இதனிடையே, சற்று நேரத்துக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், பொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டதாகவும் பிபிசி தெரிவித்திருக்கிறது.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதால், அங்கு பதற்றம் நிலவுவதாகவும், அவர்களைத் திரும்பப் பெற வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น