วันพฤหัสบดีที่ 27 สิงหาคม พ.ศ. 2552

அகதிகளாகச் சென்ற தமிழ்மக்களிடம் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரித்து கரையில் இறக்கிச் சென்ற தமிழக மீனவர்கள்..!


இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி அகதிகளாகச் சென்ற தமிழ்மக்களிடம் தமிழக மீனவர்கள் சிலர் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரித்துவிட்டு கரையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த மீனவர்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழக புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:- மன்னார், முருங்கன் பகுதியைச்சேர்ந்த முகுந்தன் வயது 24, அவரது மனைவி தர்ஷினி வயது 23 மற்றும் அவர்களது 8 வயதுக் குழந்தை ஆகியோர் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடுக்கடலில் வைத்துப் படகை நிறுத்திய இலங்கை படகோட்டிகள் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகில் இவர்கள் மூவரையும் ஏற்றி விட்டனர். அங்கிருந்து தனுஷ்கோடியில் இறங்கிய மூவரும் முகுந்தராஜர் சத்திரம் என்ற பஸ்ஸில் ஏறி மண்டபம் முகாமுக்குச் சென்றனர்.அங்கு அவர்களை அகதிகளாகப் பதிவு செய்யமுடியாது எனக் கூறியதால் தனுஷ்கோடி பொலிஸ் நிலையம் சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில், இராணுவக் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்தோம். சமீபத்தில் நடந்த சண்டையில் எமது பெற்றோர்கள் கொல்லப்பட்டதால் இங்கு வந்தோம். இங்கு வருவதற்காக, இலங்கைப் படகோட்டிகளிடம் 35ஆயிரம் ரூபா கொடுத்தோம். அவர்கள் தனுஷ்கோடியில் இறக்கி விடுவதாகக் கூறி இடைவழியில் இந்திய கடல்எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகில் எங்களை ஏற்றிவிட்டுச் சென்றனர். அப்படகில் இருந்த தமிழகமீனவர்கள் எங்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, தோடு மற்றும் செல்லிடத் தொலைபேசி போன்ற பெறுமதியான உடைமைகளைப் பறித்துக்கொண்டு கடற்கரையில் இறக்கிவிட்டனர் என்று கூறியுள்ளனர். விசாரணைக்குப்பின் இவர்களைப் பொலிஸார் அகதிகளாகப் பதிவுசெய்து மண்டபம்முகாம் அனுப்பியுள்ளனர். அகதிகளிடம் பெறுமதிமிக்க நகைகளைப் பறித்த தமிழக மீனவர்கள் குறித்து புலனாய்வுதுறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น