วันอาทิตย์ที่ 29 พฤศจิกายน พ.ศ. 2552

தபால் மூல வாக்காளர்களின் நன்மை கருதி வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு


ஜனவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள தபால் மூல வாக்காளர்களின் நன்மை கருதி 2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் அலுவலக நேரங்களில் மாவட்டச் செயலகங்கள் மற்றும் கச்சேரிகளிலும் இவை வைக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

தேர்தலுக்குரிய வாக்காளர் பதிவேடுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் வருமாறு:

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கொழும்பு 07, தொழில் செயலகம் நாரஹேன்பிட்டிய கொழும்பு 05, கல்வியமைச்சு இசுருபாய பத்தரமுல்லை, பதிவாளர் நாயகம் திணைக்களம் டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை மாவட்ட செயலகம்/ கச்சேரி டாம் வீதி கொழும்பு 12 ,அஞ்சல் திணைக்கள தலைமையகம் டீ. ஆர். விஜேவர்தன மாவத்தை கொழும்பு 10, வீடு மற்றும் பொதுவசதிகள் அமைச்சு செத்சிறிபாய ,பத்தரமுல்லை தரைப்படை தலைமையகம் கொழும்பு 03, கடற்படை தலைமையகம் கொழும்பு 01, விமானப் படை தலைமையகம் கொழும்பு 02, பொலிஸ் தலைமையகம் கொழும்பு 01, சிவில் பாதுகாப்பு திணைக்களம் இல. 23 ஸ்டேஷன் றோட் பம்பலப்பிட்டி கொழும்பு 04.

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் வருமாறு:

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்த வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் ,கொழும்பு மாவட்டம், 395 பழைய கோட்டே றோட் ,ராஜகிரிய 10107 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்படல் வேண்டும்.

ஏனைய மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பப்படல் வேண்டும். இதற்குரிய விண்ணப்பப் படிவங்களை தேருநர் பதிவேடுகள் காட்சிக்கு வைக்கப்பட்ட இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரிகள் தாமதியாது தங்களது விண்ணப்பங்களை உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் ஊடாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น