วันอาทิตย์ที่ 29 พฤศจิกายน พ.ศ. 2552

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீண்டும் வருகிறது மழை


சென்னை: வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை...

தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 7 செமீ மழை பதிவானது.

திருவாரூர், நாக்பட்டனத்தில் தலா 4 செமீ மழையும், திருத்துறைப்பூண்டி 2, மன்னார்குடி, நன்னிலம், வேதாரண்யத்தில் தலா 1 செமீ மழை பெய்தது.

டிசம்பர் 1ம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு..

கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.

சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

தமிழகம், புதுச்சேரிக்கான 1ம் தேதி காலை வரையிலான வானிலை முன்னறிவிப்பு...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 2 நாட்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்...

சென்னையில் நேற்று முதல் வானம் மேகமூட்டமாக உள்ளது. இரவில் பனி அதிகமாக உள்ளது. பகலிலும் குளிர் காற்று வீசுவதால் மக்கள் சற்று பாதிப்படைந்துள்ளனர்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น