วันเสาร์ที่ 30 มกราคม พ.ศ. 2553

விமான நிலையத்திலிருந்து ரூ.45 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு


சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 45மில்லியன் ரூபா பெறுமதியான கொகேன் போதைப் பொருட்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இந்த போதைப் பொருட்கள் அடங்கிய பயணப் பொதியினை விமான நிலையத்திலேயே விட்டு தப்பிச் சென்ற ஈரான் நாட்டுப் பிரஜை கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.

கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த டுபாய் நாட்டுக்கான விமானத்திலேயே போதைப்பொருட் கடத்தல்காரரான ஈரான் பிரஜை வருகை தந்துள்ளார்.

35வயதான இந்த சந்தேக நபரின் பயணப் பொதிகள் விமான நிலையத்திலுள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் பயணப்பொதிகளை அங்கேயே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபருடைய பயணப் பொதிகள் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 9 கிலோவும் 100 கிராமும் நிறையுடைய கொகேன் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் அவற்றைக் கடத்தி வந்த சந்தேகநபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது அவர் கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலுக்கமைய அங்கு விரைந்த சுங்க திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น