நியூயோர்க்கிலிருந்து அமைச்சர் சமரசிங்க ஜெனிவா பயணம் -நவநீதம் பிள்ளையை சந்திப்பார்?

அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று நியூயோர்க்கில் இருந்து ஜெனிவா பயணமாகியுள்ளார். ஜெனிவா செல்லும் அமைச்சர் அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான வசதிகள் மற்றும் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அமைச்சர் சமரசிங்கவின் ஜெனிவா விஜயத்தின்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையை சந்திப்பாரõ ? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என மனித உரிமை மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதான விசாரணை ஒன்றை நடத்தும் கோரிக்கையை இலங்கை உதாசீனம் செய்துவிட்டதாக அண்மையில் பிரஸ்ஸல்ஸில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார். ஆனால் நவநீதம் பிள்ளையின் குற்றச்சாட்டு ஆதாரமற்ற மற்றும் மூன்றாம் தரப்பு தகவல்களை கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேச்சு நடத்த ஜெனிவா செல்லும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நவநீதம் பிள்ளையை சந்திப்பாரா? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இதேவேளை அமெரிக்காவுக்கு சென்றிருந்த அமைச்சர் சமரசிங்க ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா.வின் ஆணையாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் ஆகியோரை சந்தித்து இலங்கையின் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி மக்கள் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Response to "நியூயோர்க்கிலிருந்து அமைச்சர் சமரசிங்க ஜெனிவா பயணம் -நவநீதம் பிள்ளையை சந்திப்பார்?"
แสดงความคิดเห็น