2010 இல் 2 கிரகணங்கள் : தமிழகத்தில் விரிவான ஏற்பாடு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2 கிரகணங்கள் நிகழ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்று ஜனவரி முதல்நாளான புத்தாண்டு அன்று நிகழ உள்ள சந்திரகிரகணம், 2 ஆவது 15ஆந் திகதி நிகழ உள்ள சூரியகிரகணம்.
சூரியகிரகணம் 108 ஆண்டுகளுக்கு பிறகு வரக்கூடிய ஒரு கங்கண சூரிய கிரகணமாகும்.
புவியை நிலவு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3,57,200 கிலோ மீட்டர் தூரத்திலும் புவியை விட்டு வெளியில் செல்கையில் 4,07,100 கிலோ மீட்டர் தொலைவிலும், சுற்றிவர நிலவு இருக்கும். தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்ற அளவு சற்று சிறியதாக இருக்கும்.
எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் ஒரு சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழு மையாக மறைக்க முடியாது. அதிகபட்ச கிரகணத்தின் போது சூரியனின் வெளி விளிம்பு ஒரு கங்கணம்போல வட்டமாக ஒளியுடன் தெரியும். இதுவே கங்கண சூரிய கிரகணம் எனப்படும்.
1901 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆந் திகதி கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிந்தது. 108 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்வரும் ஜனவரி 15ஆந் திகதி மீண்டும் சூரிய கிரகணம் தெரிய உள்ளது.
தமிழகத்தில்......
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலும் சந்திரனின் நிகழ்வின் மையப்பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கு அதிகபட்ச சூரிய கிரகணத்தின்போது ஓரளவு வட்டமான வளைய வடிவில் சூரியன் தோன்றும், மேலும் கங்கண சூரிய கிரகணம் நிகழும்கால அளவு அதிகமாக இருக்கும்.
கன்னியாகுமரியில் கங்கண சூரிய கிரகணத்தைக் காண்பதற்கான விசேஷ ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கலைச் செல்வன், சுற்றுலா அதிகாரி அரிராதா கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், ஆர்.டி.ஓ.நடராஜன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நிருபர் களிடம் கூறுகையில்,
"108 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தெரியும் கங்கண சூரிய கிரகணம் கன்னியா குமரியில் முற்பகல் 11.04 மணிக்குத் தொடங்குகிறது. மதியம் 3.05 மணிவரை கிரகணம் தெரியும். 1.14 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிகழும்.
இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது , அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும். கண் பார்வை கூட இழக்க நேரிடலாம்.
எனவே தகுந்த அறிவியல் முறைப்படி சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு தமிழ்நாடு 'சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' உதவியுடன் கண் கண்ணாடிகள் மூலமாகவும், திரைகள் மூலமாகவும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் சூரிய கிரகணத்தை தெளிவாகப் பார்க்க ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றார்.
தமிழகம், கேரளா தவிர இந்தியாவின் பிறபகுதிகளில் இது பகுதி அளவில் சூரிய கிரகணமாக தெரியும். அவர்கள் சூரியனின் ஒரு பாதியை சந்திரன் மறைப்பதுபோல் இருப்பதை காண்பார்கள். சென்னையில் கிரகணத்தின் போதுசுமார் 88.5 விழுக்காடு வரை சூரியன் மறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 Response to "2010 இல் 2 கிரகணங்கள் : தமிழகத்தில் விரிவான ஏற்பாடு"
แสดงความคิดเห็น