மட்டு. மீளக்குடியேறவுள்ளோரிற்கு அத்தியாவசிய பாவனைப் பொருட்கள்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ள குடும்பங்களில் ஒரு தொகுதியினருக்கு இன்று மாலை சமாதானத்திற்கான பல்சமய ஒன்றியத்தினால் அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இலங்கை - அமெரிக்க மிஷன் திருச்சபையின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சுமார் 3ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சமாதானத்திற்கான பல்சமய ஒன்றிய பணிமனையில் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.கணேஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களும் சமூகப் பிரமுகர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு - திருகோணமலை ஆயருமான வண. கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, "வவுனியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைதங்கல் முகாம்களில் தங்கியிருந்த நாட்களில் பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் சென்று பார்வையிட முயன்ற போதிலும் அதற்கான அனுமதி பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படவில்லை " எனக் கூறி தனது கவலையை வெளியிட்டார்.
இலங்கை - அமெரிக்க மிஷன் திருச்சபையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன் தனது உரையில் வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தமது திருச் சபையினால் ஏற்கனவே இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக கடந்த வாரம் ரூபா 15 லட்சம் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
0 Response to "மட்டு. மீளக்குடியேறவுள்ளோரிற்கு அத்தியாவசிய பாவனைப் பொருட்கள்"
แสดงความคิดเห็น