இன்று சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்:வடக்கு கிழக்கிலும் நிகழ்வுகள்

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
இது தொடர்பான நிகழ்வுகள் வடக்குக் கிழக்கிலும் நடத்தப்பட்டன. கிழக்கின் மட்டக்களப்பு நகரில் லயன்ஸ் கழக அனுசரணையுடன் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை, விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி முன்னால் ஆரம்பமான விழிப்புலனற்றோரின் ஊர்வலம் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி, திருமலை வீதியூடாகச் சென்று இந்துக் கல்லூரி மண்டபத்தையடைந்தது. பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1931 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் வெள்ளைப் பிரம்பு கண் பார்வையற்றவர்களின் அடையாளச் சின்னம் என பிரகடனம் செய்யப்பட்டதுடன் இதற்கான சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
உலகெங்கும் பரந்து வாழும் லட்சக் கணக்கான விழிப்புலன் அற்ற மக்களுக்கு உதவும் நோக்கத்துடனும், மக்களின் கவனத்தை ஈர்த்து சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும் ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
1969ஆம் ஆண்டு சர்வதேச விழிப்புலனற்றோர் சம்மேளனம் கொழும்பில் நடத்திய சர்வதேச மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
விழிப்புலனற்றவர்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளிவிளக்காக வெள்ளைப் பிரம்பு கருதப்படுகிறது. அவர்களின் வழிநடைக்கான ஊன்றுகோலாகவும், உதவு சாதனமாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு விளங்குகின்றது.
0 Response to "இன்று சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்:வடக்கு கிழக்கிலும் நிகழ்வுகள்"
แสดงความคิดเห็น