jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஐ.தே.க. แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஐ.தே.க. แสดงบทความทั้งหมด

கணக்கு வாக்கெடுப்பு, சட்டத்திற்கும் அரசியலமைப்புக்கும் முரணானது:ஐ.தே.க. தெரிவிப்பு

அரசாங்கம் நேற்று சமர்ப்பித்த கணக்கு வாக்கெடுப்பு அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் முரணானது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியது. இதனால் சபையில் 45 நிமிடங்கள் சர்ச்சை நிலவியது.

சர்ச்சைக்கு மத்தியில் கருத்து தெரிவித்த பிரதி நிதியமைச்சரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம, "நாங்கள் அரசியல் செய்கின்றோம். இது எதிர்க்கட்சிக்கு விளங்காத விடயமாகும். இதற்கு முன்னர் 10 தடவைகள் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று சுட்டிக் காட்டினார். நாடாளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர்,அரசாங்கத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்கெடுப்பு பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதி நிதியமைச்சரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம எழுந்தார்.

இதனிடையே ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பிய எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் எம்.பி.யுமன. ஜோசப் மைக்கல் பெரேரா, "கணக்கு வாக்கெடுப்பை முன்வைப்பதற்கு முடியாது. எந்த சட்டத்திட்டத்தின் கீழ் இது சமர்ப்பிக்கப்படுகின்றது? அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன" என்று சுட்டிக்காட்டினார்.

குறுக்கிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரங்களை காட்டுமாறு கோரினர். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.க.தலைவருமான ரணில் விக்ரமசிங்க, "அரசியலமைப்பின் பிரகாரமும் சட்டத்தின் பிரகாரமும் கணக்கு வாக்கெடுப்பை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்க முடியாது. அரசாங்கம் அரசியலமைப்பின் 150ஆவது உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் பிரகாரம் சமர்ப்பிக்கின்றது. அவ்வாறு சமர்ப்பிக்க முடியாது. கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்க வேண்டுமாயின் 26ஆம் பந்தியின் கீழ், அப்பால் சென்று செயற்படுவதற்கான யோசனை ஒன்றை முன்வைக்க வேண்டுமென அரசியலமைப்பின் 4ஆம் உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.2003 (3)ஆம் பிரிவின் பிரகாரம் நிதி முகாமைத்துவ பொறுப்புச் சட்டத்தின் கீழும் இதனை கொண்டுவர முடியாது. அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும் தலைவணங்கி நாம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமையினால் இரண்டுக்கும் கட்டுப்பட்டு செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

நாடாளுமன்றத்தின் மூலமே சட்டம் உருவாக்கப்படுகின்றது. சட்டத்தை மீறிச் செல்ல முடியுமென அரசியலமைப்பில் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதுடன்,நிதி முகாமைத்துவ பொறுப்புச் சட்டம் இதற்கு பொருந்தாது. யோசனையொன்றை முன்வைத்து அதற்கு பின்னர் கணக்கு வாக்கெடுப்புக்கான யோசனையை முன்வைக்க முடியும்" என்று சுட்டிக்காட்டினார்.

இதனிடையே குறுக்கிட்ட பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம, "அரசியலமைப்பின் (2) ஆம் பந்தி இங்குச் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றது. கணக்கு வாக்கெடுப்பு இதற்கு முன் 10 தடவைகள் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

கணக்கு வாக்கெடுப்பை முன்வைப்பதா இல்லையா? என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் தீர்மானிக்க முடியாது. சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே யோசனை ஒழுங்கு பத்திரத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.நாம் அரசியல் செய்கின்றோம். எதிர்க்கட்சிகள் சட்டத்தில் சிறு காரணத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு 'பொடி டிக்ஷ்' செய்கின்றது" என்று சுட்டிக் காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கும் பிரதி அமைச்சர் சரத் அமுனுகமவுக்கும் இடையில் இடம்பெற்ற வாத பிரதி வாதங்களை அவதானித்த சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார 26 (01) பிரகாரம் விசேட சந்தர்ப்பத்தின்போது நாடாளுமன்றத்திற்குப் பிரேரணையைக் கொண்டு வர முடியும். இன்று கூட கட்சித் தலைவர்களின் இணக்கத்துடனேயே கணக்கு வாக்கெடுப்பு யோசனை முன்வைக்கப்படுகின்றது" என்றார்.

இதனையடுத்து அவையிலிருந்த ஆளுந் தரப்பினர் மேசையில் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததுடன் சபாநாயகரின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம உரையாற்றுவதற்கு ஆரம்பித்தார். இதன் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மேசையிலிருந்த புத்தகங்களை கொண்டு மேசையில் தட்டி சத்தம் எழுப்பிக் குழப்பம் விளைவித்தனர்.ஐ. தே. க.வின் செயற்பாடுகளை பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் ஜே. வி. பி., தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அமைதியாக இருந்து அவதானித்துக் கொண்டிருந்தனர். இதனிடையே பின்வரிசையிலிருந்த பிரதமர் ஆசனத்திற்கு அருகில் வருகை தந்த அமைச்சர் மேர்வின் சில்வா தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை சுட்டிக்காட்டினார். (அப்போது நேரம் முற்பகல் 11.25 மணியாகும் ) இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவில் ஓரிரு உறுப்பினர்களைத் தவிர ஏனையோரும் ஆளுந்தரப்பை பார்த்து விட்டு அவையை விட்டு வெளியேறினர்.இதனையடுத்து உரையாற்றிய பிரதிநிதியமைச்சர் சரத் அமுனுகம, "ஐ.தே.க. தோல்வி கீதத்தை பாடி விட்டு வெளியேறி விட்டது. இன்று வெளியேறியவர்கள் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குப் பின்னர் சபையை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிவிடுவர்.

ஜப்பான் விளையாட்டு பொருட்களில் பொத்தானை அழுத்தினால் குரங்கு பொம்மைகள் ஆடும். அதே போல் ரணில் பொத்தானை அழுத்திவிட்டார். பொம்மைகள் ஆடுகின்றன" என்று கூறி தனது உரையைத் தொடர்ந்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜீஎஸ்பி வரிச்சலுகையை இழந்தமைக்கு அரசின் செயற்பாடுகளே காரணம் : கயந்த


ஜீ. எஸ். பி. வரிச்சலுகை கிடைக்கமல் போனதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம். அதை பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை" என ஐதேக பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"ஜீ. எஸ். பி. வரிசலுகை பெறுவதும் கூட, அரசியல் மேடைப் பேச்சு போன்றே கருதி செயற்படுவதாகத் தெரிகிறது. இதனால் 150 டொலர் மில்லியன் நிதி நாட்டுக்குக் கிடைக்காமல் போகவுள்ளது.

இது பிரச்சினையற்ற ஒரு விடயம் என அரசாங்கம் கூறுகிறது . அரசுக்கு இது பிரச்சினை இல்லை என்றாலும் மக்களுக்கு இது ஒரு பாரிய பிரச்சினையே.

இத்தருணத்தில் கிராமங்களில் ஐதேக உருவாக்கிய கைத்தொழில்கள் இன்று சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் லட்சக் கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனர். கிராமங்களுக்குக் கிடைத்து வந்த வருமானங்கள் அனைத்தும் இல்லாமல் போயுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் உத்தரவாதத்துடன் செயற்பட வேண்டும்.

மக்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாததும், 17 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்தாதிருப்பதும், வேண்டுமென்றே ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதுமே ஜீ. எஸ். பி. வரிச்சலுகையைப் பெறுவதற்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன" என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டு மக்களின் உயிர்களுடன் சுகாதார அமைச்சர் விளையாடுகிறார்- ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு


ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்பட்டமையினால் இரு சிறுமிகள் பலியானமைக்கான முழுப் பொறுப்பினையும் சுகாதார அமைச்சும் சுகாதார அமைச்சருமே ஏற்க வேண்டும். நாட்டு மக்களின் உயிர்களுடன் சுகாதார அமைச்சர் விளையாடுகின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ரேணுகா ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது நாட்டின் சுகாதாரத் துறை மிகவும் மேம்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. அதற்குக் காரணம் அன்று சுகாதாரத்துறை அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் மனித உயிர்களுடன் விளையாடாமல் மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து தமது அமைச்சுப் பொறுப்பினை நிறைவேற்றியமையே ஆகும் என்றும் அவர் கூறினார். கொழும்பு 07இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

ருபெல்லா தடுப்பூசியேற்றிய இரு பிள்ளைகள் அண்மையில் மரணமானமை குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிவர். முதலில் மாத்தறையைச் சேர்ந்த ஓர் சிறுமியே மரணமானார். இதனையடுத்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் உடனடியாக ருபெல்லா தடுப்பூசிக்கு தடையை ஏற்படுத்தி பரிசோதனைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? முதலாவது மரணம் ஏற்பட்ட ஒரு சில தினங்களில் ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்பட்டு மற்றுமொரு சிறுமி மரணமாகியுள்ளார். இந்த இரு மரணங்களுக்கும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் அவரது அமைச்சுமே பொறுப்பேற்க வேண்டும். தற்போது ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும் அவர் ஏதேதோ கூறி சமாளித்து தப்ப முனைகிறார்.

இலங்கையில் பயன்படுத்தப்படும் ருபெல்லா தடுப்பூசியானது இந்தியாவிலுள்ள சீரியல் கம்பனியொன்றிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. இது சோமாலியா, இலங்கை போன்ற மூன்றாம் வளர்முக நாடுகளுக்கே இறக்குமதி செய்யப்படுகின்றதே தவிர இந்தியõவில் அது பயன்படுத்தப்படுவதில்லை. அவர்கள் மேலைத்தேய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர்.

இந்த உண்மையை சுகாதார அமைச்சு இதுவரை மூடி மறைத்தே செயற்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த ருபெல்லா தடுப்பூசியை அவர்களே பாவிக்காத நிலையில் நாம் எதற்கு அதனைப் பாவிக்க வேண்டும்? சுகாதார அமைச்சர் அதனை ஏன் இங்கு இறக்குமதி செய்கின்றார்?

ருபெல்லா மட்டுமல்ல எந்தவொரு மருந்தோ, தடுப்பூசியோ பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் அவை உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதியாகும் திகதி, உற்பத்தியின் தரம் போன்றன குறித்து நன்கு ஆராயப்பட வேண்டும்.

ஆனால் இம்முறை இரு அப்பாவி சிறுமிகளின் பரிதாப மரணத்துக்குக் காரணமாக இருந்த ருபெல்லா தடுப்பூசியில் நான் இப்பொழுது குறிப்பிட்ட உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதியாகும் திகதி போன்றன பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சாதாரண மிளகாய்த்தூள் பக்கட்டில் கூட காலாவதியாகும் திகதி போடப்பட்டிருக்கும். அவற்றை பார்த்தே எம்மவர்கள் கடைகளில் வாங்குவார்கள். அப்படியானால் மனித உயிர்களுடன் தொடர்புடைய இந்த ஊசி குறித்து எவ்வளவு அவதானத்துடன் சுகாதார அமைச்சு செயற்பட்டிருக்க வேண்டும் என்பதை செய்தியாளர்களாகிய நீங்களே சற்று எண்ணிப் பாருங்கள்.

இங்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் தடுப்பூசிகளும் மருத்துவ நிபுணர் குழுவினரால் நன்கு பரிசீலிக்கப்பட்ட பின்பு இறுதியாக சுகாதார அமைச்சரின் இறுதித் தீர்ப்புக்கு பின்னரே அவை பாவனைக்கு அனுமதிக்கப்படல் வேண்டும். ஆனால் அமைச்சர் இது குறித்து ஆராயாமல் அனுமதி வழங்கியது ஏன்? மக்களது, சிறுவர் சிறுமியரது உயிர்களுடன் அவர் விளையாடி வருகின்றார்.

முதலில் ஏற்பட்ட மரணத்துடனேயே ஊசியினை தடை செய்திருந்தால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டிருக்காது. ஏனைய உலக நாடுகளில் இந்நிலை ஏற்பட்டிருந்தால் அந்நாடுகளது சுகாதார அமைச்சர்கள் உடனடியாக தமது பதவியினை இராஜினாமா செய்திருப்பார்கள். ஆனால் நிமால் சிறிபால டி சில்வாவோ மழுப்பல் பேச்சுக்களை பேசிக் கொண்டு இன்னும் அமைச்சுப் பதவியில் அமரவே ஆசைப்படுகின்றார். அவருக்கு மக்களது உயிர்கள் குறித்து கிஞ்சித்தேனும் அக்கறை கிடையாது. இத்தகையவர்களே இன்றைய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளில் அமர்ந்துள்ளனர்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த ருபெல்லா தடுப்பூசி விலை குறைவென்பதற்காக அவற்றை இறக்குமதி செய்து எமது பிள்ளைகளுக்கு ஏற்றலாமா? மனித உயிர்களை பணத்துடன் ஒப்பிட முடியுமா?

கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் போதிய மருந்துகள் கிடையாது. நூற்றுக்கு எண்பது வீதமான மருந்துகளை பார்மஸிகளில் வாங்கும்படி வைத்தியர்கள் நோயாளிகளுக்குக் கூறுகின்றனர். இதுதான் இன்றைய ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சினதும் அமைச்சரதும் இலட்சணமாக உள்ளது. சற்று ஓய்ந்துவிட்டிருந்த டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அரச நிறுவனங்களிலும் ஏன் சுகாதார அமைச்சிலும் நுளம்புகள் பெருகிக் காணப்படுகின்றன. இவற்றுக்கு பரிகாரம் காணப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிப் போகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் இன்று இராணுவத்தினருக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது-ஐ.தே.க


பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்திருக்கின்ற நிலையில் அரசாங்கம் அதனை இன்று இராணுவத்திற்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. நாட்டை மீட்டுக் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்துகிறது. இன்றைய அரசாங்கத்தின் பயணமானது ஜனநாயகத்துக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதகமானதாகவே அமைந்துள்ளது. அதனைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது

என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. எம்.பி சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு அறிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம். பி.க்களோ ஊடகவியலாளர்களோ நாட்டின் தேவை கருதிய, மக்களின் நன்மை கருதிய கருத்துக்களை வெளியிட முடியாத சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தவறான செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதற்கான உரிமைகள் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கின்றன. அதேபோல் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கான கடப்பாடும் உரிமையும் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இருக்கின்றன.

இந்த உரிமைகளும் கடப்பாடுகளும் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களால் அடக்கு முறைக்குள் தள்ளப்பட்டுள்ளன. யுத்தம் நிறைவøடந்துள்ள இக்கால கட்டத்தில் மக்களின் வாழ்க்கைச்சுமை இறக்கி வைக்கப்படவில்லை. அதேபோல் நிவாரணங்கள் இல்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மறுக்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்கின்ற போது அடுத்த வாரமளவில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருக்கின்றது. சிலிண்டர் ஒன்றுக்கு குறைந்தது 100 ரூபாவேனும் அதிகரிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. இதன் பாரம் மக்களுக்கே சென்றடையவுள்ளது. தெனியாயவில் கட்டப்படுகின்ற மாளிகைக்கு என அமைக்கப்பட்டு வருகின்ற வீதி மகநெகும செயற்றிட்டத்தின் கீழ் பொதுமக்களின் பணத்தை செலவழித்தே மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த உண்மையை வெளிப்படுத்துவதற்கு முனைந்த எம்மீதும் ஊடகங்கள் மீதும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் அடியாட்களும் தாக்குதல் நடத்தினர். அன்று அவர்கள் செய்த முதல் வேலையே ஊடகவியலாளர்களின் கெமராக்களை நிலத்தில் அடித்து நொருக்கியது தான். இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் எந்த விதமான விசாரணை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் வீடு அலுவலகம் சேதமாக்கப்பட்டது. தொடர்பிலும் இதுவரையில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிராக இராணுவத்தினர் யுத்தம் புரிந்தனர். இழப்புக்களை சந்தித்தனர். ஆனால் அவர்களுக்கான நிவாரணங்களில் சம்பளத்தில் அரசாங்கம் கை வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அது மட்டுமல்லாது நாட்டை சுதந்திரமாக்கிய சரத் பொன்சேகா இன்று அரசாங்கத்தில் இருந்து ஓரம் கட்டப்படுள்ளார். இது தான் அரசாங்கத்தினால் இராணுவத்திற்கு வழங்கப்படுகின்ற கௌரவமாக இருக்கின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது உணரப்பட்டதாலேயே எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான தேவை எற்பட்டது. அது தற்போது சாதகமான பலனையும் தந்திருக்கின்றது.

பொது வேட்பாளர் குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அரசாங்கத்தின் அடக்கு முறைகள், அச்சுறுத்தல்கள், சனநாயக விரோத செயற்பாடுகள் யாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைப்பதே எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தென் மாகாண சபை தேர்தல் முடிவு அரசின் எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் : ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க


தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 90 வீதமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைப்போம் எனக் கூறிய அரசாங்கத்தின் இந்த சரிவானது எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி வந்துள்ளதால் 1300 மில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் தென் மாகாண சபைத் தேர்தலில் பாரிய அளவு அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து கூறுகையில், ஜனாதிபதியின் குடும்ப அரசியலுக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான அரசின் செயற்பாட்டிற்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். தென் மாகாண மக்களின் இந்தத் தீர்ப்பு ஏனைய மாகாண மக்களுக்கும் தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ வெற்றியையும் தென் மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டத் திட்டங்களையும் முன்வைத்தே அரசாங்கம் இந்தத் தேர்தலில் களமிறங்கியது. இதன் மூலம் பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு வாக்குகளை அரசாங்கத்தால் பெற முடியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி பிறந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விட இத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பெறப்பட்டுள்ளன.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தின் முழுப் பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வந்தனர். இதன்போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட அமைச்சர்கள் பலரும் அரசாங்கம் 90 வீதமான வாக்குகளைப் பெற்று பாரிய வெற்றியீட்டும் என தொடர்ச்சியாக கூறி வந்தனர். ஆனால், அவர்கள் கூறிய இலக்கை நெருங்கக் கூட முடியாமல் போயுள்ளது.

இந்த மாகாணத்தில் பாரிய அளவு தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று கூட கட்டவுட், பெனர், போஸ்டர் என தேர்தல் விளம்பரங்கள் நீக்கப்படாமல் இருந்தன. 7 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன என அறிவிக்கப்பட்ட போதிலும் 9 ஆம் திகதி வரை அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயல்படும் இவர்களால் மக்களை சட்டத்தை மதித்து செயல்படுமாறு எப்படிக் கூற முடியும்? மக்கள் இப்போது தெளிவடைந்துள்ளார்கள். தொடர்ந்தும் இவர்களால் மக்களை ஏமாற்ற முடியாது. இவர்களின் ஏமாற்று வித்தைக்கான பரிசினை மக்கள் வழங்குவார்கள். அதற்கான ஆரம்பமே தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள். ஜனாதிபதிக்கு நன்றி செலுத்தும் முகமாக தென் மாகாண மக்கள் 90 வீதமான வாக்குகளை வழங்கி அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேட்டிருந்தார். ஆனால், மக்கள் இதனை நிராகரித்துள்ளார்கள். ஜனாதிபதி இந்த மாகாணத்தில் தங்கியிருந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அது மாத்திரமல்லாமல் அந்தக் காலங்களில் அமைச்சரவை ஒன்றுகூடலையும் தென் மாகாணத்தில் கூட்டியிருந்தார். இதன் மூலம் வீண் செலவுகளை செய்திருக்கின்றார். இந்த ஒன்றுகூடல்களுக்கான தண்ணீர் போத்தல்கள் கூட வானூர்தியின் மூலமே கொண்டு செல்லப்பட்டன. துறைமுகத்தில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக தென் மாகாணத்தில் இலட்சக்கணக்கான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறான போலி உறுதி மொழிகள் மூலம் பாரிய வெற்றி பெறலாம் என கனவு கண்டது. இதனை இனங்கண்டு கொண்ட மக்கள் அதற்கான தக்க பதிலை வழங்கியுள்ளார்கள். அரசாங்கம் கூறுவதைப் போல மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. எனவே அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates