jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கருணாநிதி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கருணாநிதி แสดงบทความทั้งหมด

தமிழக இலங்கை அகதிகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை


தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். அமைச்சர்கள், துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இலங்கையில் தமிழ் அகதிகள் முள்வேலி முகாம்களுக்குள்ளே அவதிப்படுவதை எண்ணி கண்ணீர் உகுத்து அவர்களை அந்த முகாம்களில் இருந்து விடுவிக்க தமிழகத்தில் இருந்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்றனர்.

அவர்கள் நிலை அறிய செய்த இந்த ஏற்பாட்டின் விளைவாக மாபெரும் வெற்றியோ, மகத்தான வெற்றியோ கிடைக்கா விட்டாலும்கூட, அடைபட்டிருந்த 3 லட்சம் பேர்களில் சுமார் ஒரு லட்சம் பேரையாவது இதுவரை அந்த கூண்டுகளில் இருந்து வெளியே கொணர்ந்து அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அது போதுமானதல்ல. மேலும் அவர்கள் அனைவரையும் விடுவித்து, வாழ்வாதாரங்களை வகுத்தளித்து மீண்டும் அமைதியான நல்வாழ்வு பெற்றிட இந்திய அரசின் முயற்சிகளும், அதற்காக நமது தூண்டுதல்களும் தொடங்கப்பட வேண்டுமென்றே கருதுகிறோம்.

இந்த நிலையில் ஏற்கனவே நான் இந்திய மண்ணில் அகதிகளாக குடியேறியிருக்கின்ற இலங்கை தமிழர்களை இந்த மண்ணின் நிரந்தர குடிமக்களாக ஆக்கிட வேண்டும் என்று, அதற்கான முயற்சியிலே ஈடுபட்டு நமது வேண்டுகோளை பரிசீலிப்பதாக இந்திய பேரரசின் சார்பிலும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே இலங்கை முகாம்களில் இருக்கின்ற தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறமிருக்க தமிழ்நாட்டில் தொடர்ந்து பல ஆண்டு காலமாக இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகள் நிலை என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற வகையிலும், இன்னும் சொல்லப்போனால் நம் நெஞ்சத்தைக் குத்திக்காட்டுகின்ற நிலையிலும் நவம்பர் 11ஆம் திகதியிட்ட ஓர் ஆங்கில வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்துள்ள நீண்ட கட்டுரை ஒன்றை நான் படிக்க நேர்ந்தது.

இலங்கையில் அகதிகளாக உள்ள தமிழர்கள் வாடி வதங்குவது ஒரு புறமிருக்க, இங்கே நமது தமிழ் மண்ணில் அகதிகளாக வந்து சேர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி எத்துணை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை புகைப்படங்களோடு அந்த வார ஏடு வெளியிட்டுள்ள காட்சிகளைக் கண்டு, கண்ணீர் பெருக்கியதோடு அவர்கள் கவலைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வது தான் நமது கடமை ஆகும் எனக் கருதினேன்.

இலங்கைத் தமிழ் அகதிகளைப் பாதுகாக்க வேண்டும்

இலங்கைத் தமிழ் அகதிகளைப் பாதுகாத்திடவும், அவர்கள் தம் பட்டினி போக்கிடவும், படிப்பு வாய்ப்பு வழங்கிடவும், அவர்களது குறைகளை நீக்கி தாய் மண்ணில் வாழ வழியின்றி தமிழ் மண்ணில் வாழ்வதற்கு வந்தவர்களை அமைதியாக வாழச் செய்திட இங்குள்ள தமிழக அரசின் அதிகாரம் பெற்ற எல்லா துறையினருக்கும் பொறுப்பு உண்டு.

இதை நிலை நாட்டி அவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் உழைத்திடுவோம் என்ற உறுதியோடு செயல்பட வேண்டும் என தொடர்புடைய துறையினர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கி- ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவன செய்திடவும்- அவர் தம் அல்லல் போக்கிடவும் அட்டியின்றி உடனே அரும்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று ஆணையிடுவதற்கு வாய்ப்பாக இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை அழைத்து விவாதிக்கவிருக்கிறேன்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இன்னல் இம்மியளவும் இல்லாத வகையில் இன்புற்று வாழ்ந்திட இன்றைய கூட்டத்தின் வாயிலாக தேவையான நிதி ஒதுக்கி, அவர் தம் தேவைகள் நிறைவு செய்யப்பட வழி வகுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

இந்நிலையில் இலங்கை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்தசங்கரி முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

"இந்தியாவில் உள்ளது போல அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் பெரும்பான்மையான தமிழர்களுக்கு ஓரளவு திருப்தி ஏற்படும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வுக்கு இலங்கைக் குழுவைச் சம்மதிக்க வைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீங்கள் (கருணாநிதி ) அழுத்தம் கொடுக்க வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவியைப் பெற்றுத் தரவும் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சீரிய பணியாற்றும் காவல்துறையினரை போற்றிப் பாராட்டிட வேண்டும் - கருணாநிதி


சென்னை: காவல் துறையினர் ஆற்றி வரும் கடமையைப் பொதுவாக நாம் போற்றிட வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றுமாக நேர்ந்துவிடும் நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, காவல் துறையினரையே குற்றஞ் சொல்லிக் குறை காண்பது, அவர்களின் நீண்ட நெடிய தொண்டற வாழ்க்கையில் திடீரென்று ஒரு கறும்புள்ளியைக் குத்தி அவர்கள் தொடர்ந்து சீரிய பணியாற்றுவதற்கு தயக்கம் ஏற்படுத்த முயல்வதும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல என்பதோடு; சமுதாயக் கேடாகவே அமையும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது...

காவல் துறையைப் பொறுத்தவரையில் என்னுடைய கருத்து; எதிர்க் கட்சியில் நான் இருக்கும்போது ஒரு விதமாகவோ, ஆளுங்கட்சியில் இருக்கும்போது இன்னொரு விதமாகவோ என்றைக்கும் இருந்ததில்லை.

பொதுவாக நம்முடைய நாட்டில் அரசியல்வாதிகள் சிலருக்கு; ஏன்; இன்னும் சொல்லப் போனால் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கே போலீஸ் என்றால் ஒரு காழ்ப்பு - ஒரு வெறுப்பு - அவர்களைக் கண்டனம் செய்வதிலே தனி விருப்பு என்ற நிலை இன்னும் கூட மாறாமல் இருக்கின்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இதற்கு மாறாக, ஆளுங்கட்சியாக இருந்த போதிலும்; எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும் காவல் துறையினர் பற்றி கொண்டிருந்த கருத்துகளை முகப்பிலேயே தொகுத்தளிக்க விரும்புகிறேன்.

தியாக சீலர்கள்...

1962-ம் ஆண்டு எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்தபோது காவல்துறை மானியத்தில் சட்டமன்றத்தில் 12.7.1962 அன்று நான் பேசியது வருமாறு:

கடும் மழையிலும், கொடிய வெயிலிலும், நள்ளிரவிலும் தங்கள் பணியினை கொலைகாரர்கள் மத்தியிலும், கள்வர்களிடையிலும் தங்கள் உயிரைப் பற்றிய கவலை இல்லாமல் மரணத்தைத் துச்சமாக மதித்து கடமைக்காகப் போராடி வருகின்ற அந்தத் தியாக சீலர்களை தி.மு.க. பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறது

இந்த என் கருத்தை யார் மறந்தாலும் காவல்துறை நண்பர்கள் மறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காவல் துறையினரின் வாழ்க்கைத் தரம் குறித்து தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, "உதயசூரியன்'' நாடகத்திற்காக போலீசாருக்குச் சார்பாக நான் இயற்றி, தடை செய்யப்பட்டிருந்த ஒரு தாலாட்டுப் பாட்டையே பேரவையிலே பதிவு செய்ய அங்கே பாடிக் காட்டினேன்.

போலீஸ் கமிஷன் அமைத்தேன்...

இதன் தொடர்ச்சியாகத் தான் 1969-ம் ஆண்டு நான் முதல்வராகப் பொறுப்புக்கு வந்ததும், காவலர் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்த வேண்டுமென்று கருதி, தமிழ்நாட்டிலே வெள்ளைக்காரன் காலத்திலிருந்து அதுவரை உருவாக்கப்படாத காவல் துறைக்கான தனிக் குழு (போலீஸ் கமிஷன்) ஒன்றையே ஏற்படுத்தி, அதன் பரிந்துரைகளைப் பெற்று நடைமுறைப்படுத்தினேன்.

அதற்குப் பிறகும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மேலும் இரண்டு முறை காவல் துறைக்கான கமிஷன் அமைக்கப்பட்டது. இவற்றின் பரிந்துரைகளின் விளைவாகத்தான் 1967-ம் ஆண்டிலே காவலர்களுடைய அடிப்படை சம்பளம் ரூ.70 ஆகவும், பஞ்சப்படி ரூ.59 ஆகவும் இருந்தது; தற்போது காவலர்களுடைய அடிப்படை சம்பளம் ரூ.7,300 ஆகவும், அகவிலைப்படி உள்பட; மொத்தம் ரூ.10,300 என உயர்ந்துள்ளது.

மக்கள் தொண்டில் 150-ம் ஆண்டினைக் கொண்டாடும் தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து மாநிலத்தில் பெரிய அளவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் ஊனம் ஏதும் நிகழாமல் காத்திட தன்னால் இயன்ற அளவிற்குப் பாடுபட்டு வருகிறது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.

சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் ஏதுமின்றி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதற்கு பெரிதும் காரணம் காவல்துறை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

நக்சலைட்டுகளை முறியடித்தனர்..

கொடைக்கானல் வனப்பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றை அமைக்க முற்பட்ட தீவிரவாதிகளின் முயற்சிகளை தமிழ்நாடு காவல் துறையினர்தான் முறியடித்தனர்.

சரியான தருணத்தில் 22 பேரை கைது செய்து, அவர்களில் 12 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததன் மூலம் பிரிவினை சக்திகள் மேற்கொண்ட மத நல்லிணக்கத்தைத் தகர்க்கும் வன்முறை முயற்சிகளை காவல் துறையினர்தான் தடுத்துள்ளனர்.

மக்கள் போர்ப்படை குழுவின் நிறுவனரும், நான்கு நிலக்கிழார் கொலைகளில் சம்பந்தப்பட்டு, கடந்த 37 வருடங்களாக தலைமறைவாக இருந்தவருமான நக்சலைட் தீவிரவாதி தமிழ்வாணனை 12.04.2009 அன்றும், 1980-ல் ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் மற்றும் மூன்று நக்சலைட்டுகளை கொன்றுவிட்டு, காவலில் இருந்து தப்பித்து, கடந்த 38 வருடங்களாக தலைமறைவாக இருந்த ஜோலார்பேட்டையைச் சேர்ந்த நக்சலைட் தீவிரவாதி சிவலிங்கம் (எ) சிவா என்பவரையும், அவரது சகா சாமி (எ) சாமிநாதன் ஆகியோர்களை 10.05.2009 அன்றும், ஆயுள் தண்டனை அடைந்து, பரோலில் சென்று, கடந்த 22 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த நக்சலைட் தீவிரவாதி என்.கே.கோபால் என்பவரை 24.6.2009 அன்றும் காவல் துறையினர் கைது செய்தனர்.

குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள்...

குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து வருவதாலும், நமது மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு; அதனால், 2006-ம் ஆண்டு 89 சதவீத குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, களவுபோன சுமார் 34.8 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இதே போன்று, 2007-ம் ஆண்டு 87 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 48.7 கோடி ரூபாய் மதிப்புள்ள 83 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டும், 2008-ம் ஆண்டு 82 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 47.61 கோடி ரூபாய் மதிப்புள்ள 76 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டும், இவ்வாண்டும் செப்டம்பர் வரை 72 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 39.7 கோடி ரூபாய் மதிப்புள்ள 66 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு சில வழக்குகள்:

சென்னை நகரில், மின்ட் தெருவிலுள்ள சந்திரபிரபு ஜெயின் கோவிலில், பூசாரி ஒருவரை கொலை செய்து, சுமார் 1.2 கோடி மதிப்புள்ள 22 கிலோ கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், ஆறு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, 9.2 கிலோ தங்க நகைகள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னையில் கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, 15 வருடங்களாக தலைமறைவாக இருந்த தண்டையார் பேட்டையைச் சேர்ந்த குப்பன் என்பவரும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த மன்னார் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த மணியரசு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, 88 சவரன் தங்க நகைகள் உள்பட சுமார் 21 லட்சம் மதிப்புள்ள களவு போன பொருட்கள் மீட்கப்பட்டன.

சென்னை, பூக்கடை, சவுகார்பேட்டை நகை வியாபாரி சுரேஷ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 2.15 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளி நேமிசந்த் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து, களவு போன சொத்துகள் கைப்பற்றப்பட்டன.

சென்னை, சவுகார்பேட்டையில் ரத்தன் ஆர்.ஜெயினி என்பவரிடமிருந்து ரூ.50 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கொள்ளையடித்து சென்ற வழக்கில் ஆறு எதிரிகள் கைது செய்யப்பட்டு, ரூ.44.5 லட்சம் கைப்பற்றப்பட்டது.

சென்னை நகரில், கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு மற்றும் கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரி சுஹேல் அகமது என்பவர் கைது செய்யப்பட்டு, 25 வழக்குகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 301 சவரன் தங்க நகைகள், 14 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.

சென்னை காவல் துறையினர், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மலர்மன்னன் என்ற குற்றவாளியை கைது செய்து, 45 வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 325 சவரன் தங்க மற்றும் வைர நகைகள் மற்றும் 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர்.

சென்னை, அண்ணாநகரில் அசோக் மால்பானி மற்றும் அவரது மனைவியிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் பணம் ரூ.10 லட்சம் ஆகியன கைப்பற்றப்பட்டன.

சென்னை, தியாகராயநகர், `பிராட் லைன் கம்ப்யூட்டர்ஸ் சிஸ்டம்' என்ற நிறுவனத்திலிருந்து `வெஸ்கோஸ் ப்ராபர்டிஸ் அன்ட் டெவலப்பர்ஸ்' உரிமையாளர் சரவணன் என்பவர் மோசடி செய்து பெற்ற ரூ.1.27 கோடி மதிப்புள்ள 250 கணினிகளையும், 300 மடிக் கணினிகளையும் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் எதிரியை கைது செய்து, அப்பொருட்களை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், 52 கன்னக்களவு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் ஆறு குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள 300 சவரன் நகைகளை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஸ்ரீதர் மற்றும் ஐந்து நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நான்கு கார்கள், நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், உமா மகேஸ்வரி மற்றும் மூன்று நபர்களை கைது செய்து, சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தொன்மை வாய்ந்த 24 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.

200 வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஏற்கனவே ஜந்து முறை குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷையும், அவருடன் சேர்ந்த மற்ற மூன்று குற்றவாளிகளையும் 20.5.2009 அன்று சென்னை புறநகர் காவல் துறையினர் கைது செய்து 70 சவரன் தங்கநகைகளையும், வெள்ளி ஆபரணங்களையும் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில், வேப்பூர் அருகில் திருச்சியிலிருந்து வந்த லாரியை வழிமறித்து ரூ.3.72 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், இருளாண்டி மற்றும் 12 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2.85 கோடி பணத்தைக் கைப்பற்றினர்.

கோவை மாவட்டத்தில் 15 வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட, ஆண்டிப்பட்டி முத்து என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 100 சவரன் நகைகளும், நான்கு கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட யோகேஷ், சரவணன், குணா, மனோகரன் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன.

திருச்சி மாவட்ட காவல் துறையினர், ஹவுரா விரைவு ரயில் வண்டியில் கடத்தி செல்லப்பட்ட ரூ.5.5 கோடி மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி சகாயராஜ் உள்ளிட்ட இரு எதிரிகளை கைது செய்தனர்.

கரூர் மாவட்ட காவல்துறையினர் ஒரு வெடிமருந்து கடையில் இருந்து 32,522 மின் டெட்டனேட்டர்கள் மற்றும் 4,532 சாதாரண டெட்டனேட்டர்களை திருடிய எட்டு குற்றவாளிகளை கைது செய்து, வெடிபொருட்களை மீட்டனர்.

ரயில்வே காவல்துறையினர், ராஞ்சியை சேர்ந்த ராஜன் ராம் மற்றும் அமர்நாத் ஜெய்ஸ்வால் ஆகியோரை கைது செய்து 34 ரெயில் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 சவரனுக்கும் அதிகமான தங்க நகைகள் கைப்பற்றினர்.

விஜயன் கொலை வழக்கில் திறமையான விசாரணை..

மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர், திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கரன் என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கிலும் திறமையாக புலன் விசாரணை செய்து எதிரிகளை கைது செய்தனர்.

மேலும், `கோல்டு குவெஸ்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' சம்பந்தப்பட்ட தங்கக்காசு மோசடி வழக்கில் இத்துறையினர் திறமையாக விசாரணை செய்து, 25 எதிரிகளை கைது செய்து, சுமார் ரூ.192 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி வைத்து, எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவினர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் வலங்கைமானைச் சேர்ந்த செந்தில் ஆகியோரை கைது செய்து, திருவாரூர், திருத்துறைப்பூண்டி அருள்மிகு மருந்தீஸ்வரர் உடனுறை பெரிய நாயகி அம்மன் கோவிலில் எட்டு மாதங்களுக்கு முன்பு களவு போன கோடிக்கணக்கில் மதிப்புள்ளதெனப்படும் தொன்மைவாய்ந்த மரகதலிங்கத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மூன்றாண்டு காலக்கட்டத்திலேயே தங்கள் உயிரைப் பணயம் வைத்து சமூக எதிரிகளோடும், கள்வர்களோடும் போராடி, காவல் துறையினர் பெற்றிருக்கும் வெற்றிகளின் காரணமாக விளைந்துள்ள சாதனைகளை நாம் பாராட்டிட வேண்டும்.

போற்றிடத்தான் வேண்டும்...

சமுதாயப் பாதுகாப்புக்காக - சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பதற்காக - மனித உயிர்களையும் உடைமைகளையும் காப்பதற்காக; காவல் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் எண்ணற்றவை மட்டுமல்ல; எண்ணிப் பார்த்திடவே இயலாதவை. குற்ற நிகழ்வுகளில் கடைப்பிடிக்கப்படும் உயர் தொழில்நுட்பங்கள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.

எனவே காவல் துறையினர் ஆற்றி வரும் கடமையைப் பொதுவாக நாம் போற்றிடத்தான் வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றுமாக நேர்ந்துவிடும் நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, காவல் துறையினரையே குற்றஞ் சொல்லிக் குறை காண்பது, அவர்களின் நீண்ட நெடிய தொண்டற வாழ்க்கையில் திடீரென்று ஒரு கறும்புள்ளியைக் குத்தி அவர்கள் தொடர்ந்து சீரிய பணியாற்றுவதற்கு தயக்கம் ஏற்படுத்த முயல்வதும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல என்பதோடு; சமுதாயக்கேடாகவே அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுவது எனது கடமையென்பதால் இந்த நீண்ட கடிதம் எழுத நேரிட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் - போலீஸ் மோதல் தொடர்பாக நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் காவல்துறையின் சிறப்புகள், சேவைகள் குறித்து முதல்வர் வெகுவாகப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர்-கருணாநிதி


வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரில் முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இலங்கை மஹிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு எம்.பிக்கள் நேற்று சென்னை திரும்பினர். பின்னர் அவர்கள் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து 9 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தனர்.பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"இந்தியக் குழுவை அனுப்பி இலங்கை நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ளுமாறு எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் நான் செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசுக்கு அனுப்பினேன். அதன் பிறகு தமிழர்கள் அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதாக செய்திகள் வந்தன.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். இலங்கை ஜனாதிபதியின் கடிதத்துக்கு இணங்க ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்து என்னை சந்தித்தார். இருவரும் பேசி, 10 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்தோம்.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் செலவில் குழு செல்ல தீர்மானிக்கப்பட்டது. அதற்கு இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றோம்.இதன் அடிப்படையில் 10ஆம் திகதி இந்தியக் குழு இலங்கைக்கு சென்றது. அங்கு அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள், தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அந்த குழு என்னிடம் அறிக்கை தந்துள்ளது. அது தவிர இந்த பயணத்தால் ஏற்பட்ட பயன்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அங்குள்ள முகாம்களில் 2 லட்சத்து 53 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். மழைக்காலம் தொடங்குமுன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியக் குழு வலியுறுத்தியது.

அதை ஏற்று முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் உறுதியளித்தனர். அந்த பணி நாளை தொடங்குகிறது. இந்த ஆறுதலான செய்தியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் நிறைய கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு உதவியை கேட்டுள்ளது. அப்படி உதவுவது தமிழர்களின் துன்பத்தை விரைவில் நீக்கும் என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம். அனாதை குழந்தைகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் இலங்கை உறுதி அளித்திருக்கிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது" என கருணாநிதி.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசு அனுப்பவில்லை-தமிழக முதல்வர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசு சார்பில் அனுப்பப்படவி்ல்லை என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அரசின் சார்பில் குழு அனுப்புவதாக இருந்தால்தான் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும், சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது சென்றுள்ள குழுவில் உள்ள உறுப்பினர்களின் விமானக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளைக் கூட அந்தந்தக் கட்சிகள்தான் ஏற்றுள்ளன என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்தியநாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில், அதற்குப் பதிலளிக்கும முகமாக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணத்துக்கு அனுமதியளித்து யார் என்றும், குழுவை தேர்வு செய்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையிலிருந்து திரும்பியதும் கருணாநிதியிடம் அறிக்கை அளிக்குமா அல்லது நாடாளுமன்றத்திடம் அறிக்கை அளிக்குமா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.

அண்மையில், தமிழர்களின் நிலை குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, அந்த முகாம்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுப்பியுளளார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஆளுங்கட்சி எம்.பி.க்கள் குழுவை மட்டும் இலங்கைக்கு அனுப்புவதன் நோக்கம் குறித்து சந்தேகம் வெளியிட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி ராஜபக்ஷவின் விருந்தினர்களாக எம்.பி.க்கள் அங்கு சென்றிருக்கக் கூடாது எனத்தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஸ்டாலின் தலைமையில் இந்திய அனைத்துக் கட்சி குழு 10ஆம் திகதி இலங்கை விஜயம்


நிவாரணக்கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகளை நேரடியாக பார்வையிடும் பொருட்டு தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை ஆராயும் பொருட்டு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக அனைத்துக் கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையிலேயே பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை அனுப்பிவைக்கும் தீர்மானத்தை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.இது தொடர்பான இறுதிமுடிவு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கருணாநிதியின் பெற்றோர் பெயர் - தீக்குளிக்க போவதாக காங். மிரட்டல்


ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு கருணாநிதியின் பெற்றோர் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க கோரியும் தீக்குளிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது என்று காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர், அஞ்சுகம் பெயர் சூட்டப்பட்டு அவர்களின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பஸ் நிலையத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 13 ம் தேதி அன்று திறந்து வைக்கின்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பஸ் ஸ்டாண்ட் இருந்த இடம் காமராஜர் திடல் என இருந்தது. எனவே, பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைத்து, அங்கு அவரது சிலையையும் வைக்க வேண்டும் என காங்கிரசார் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், போராட்டக்குழு ஜெயக்குமார் , சிவாஜி முத்துக்குமார் ஆகியோர் கூறுகையில், ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்க மறுத்தை கண்டித்து எங்கள் பகுதி வீடுகளில் நேற்று முதல் கறுப்பு கொடி ஏற்றியுள்ளோம்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சுடலைமுத்து என்பவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.

காக்கா பிடிப்போம்…

காமராஜர் பெயர் வைக்க கோரி கழுதை, எருமை மாடுகளிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்துவோம். காக்கா பிடிப்போம்.

திறப்பு விழா அன்று காமராஜர், கக்கன் திருஉருவ சிலையை அங்கு நிறுவுவோம். இதற்காக சிலைகள் தயாராக உள்ளது. மேலும், அன்று தீக்குளிக்கும் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.

இதனால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழாவின் போது தீக்குளிக்கப்போவதாக திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசார் அறிவித்துள்ளது தமிழக அரசியலை பரபரப்பு அடையவைத்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates