கிழக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சிற்றூழியர் நியமனம்

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் பல வருடங்களாக தொண்டர்களாகச் சேவையாற்றிய 240 பேருக்கு, சுகாதார சிற்றூழியர்கள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனம் வழங்கும் வைபவம் நேற்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன் தலைமையில் திருகோணமலை விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற போது மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு இந்நியமனங்களை வழங்கினார்.
அங்கு உரையாற்றிய முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
"கிழக்கு மாகாணம் செயல்படத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை பூதாகரமாகப் பேசப்பட்ட சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான பிரச்சினைக்குத் தற்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்நியமனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதன் காரணமாகவே இதுவரை காலமும் தாமதம் ஏற்பட்டது.
இநநியமனம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு வதந்திகளையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவற்றுக்கொல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றால் அது எமது மாகாண சபைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.
அத்தோடு இன்று நியமனம் பெற்றிருக்கும் அனைவரும் தமது குடும்ப வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழிலாக இதனைக் கருதாமல் சேவை மனப்பான்மையோடு பணியாற்றி கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் ஒரு புதிய திருப்பத்தினை ஏற்படுத்த வேண்டும்"என்றார்.
இந்நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Response to "கிழக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சிற்றூழியர் நியமனம்"
แสดงความคิดเห็น