சுயநலனுக்காக ஆடும் சச்சின்-அதிருப்தியில் ரசிகர்கள்

சென்னை: ஐந்து உலக கோப்பை ஆட்டங்களை சந்தித்துவிட்ட பிறகும், சச்சின் தென்டுல்கர் ஏன் இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடுகிறார் என்ற சலசலப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.
கிரிக்கெட் மேஸ்ட்ரோ எனப் புகழப்படும் சச்சின் தெண்டுல்கர் 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். ஸ்ரீகாந்த், அசாருதீன், கங்குலி, டிராவிட், டோனி, ஆகியோரது தலைமையில் விளையாடி உள்ளார். அவரும் கேப்டனாக இருந்துள்ளார்.
154 டெஸ்ட் போட்டிகளில் 12,773 ரன்னும் (42 சதம்), 434 ஒரு நாள் போட்டிகளில் 16,993 ரன்னும் (44 சதம்) எடுத்துள்ளார். இவையெல்லாம் அவரின் சாதனைகளே. பல்வேறு ஆடுகளங்களில் கிரிக்கெட் ரசிகர்களை பரவச வெள்ளத்தில் ஆழ்த்திய பெருமை சச்சினுக்கு உண்டு.
ஆனால், கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்ட சச்சினின் ஆட்டத் திறன் மங்கிவிட்டதாக சமீப காலமாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஆனாலும் நல்ல உடல் திறனுடன் இருப்பதாக சச்சினும் கூறுகிறார், அவருடன் ஆடுபவர்களும் கூறுகிறார்கள், கிரிக்கெட் தேர்வுக் குழுவும் சச்சின் இஸ் பெஸ்ட் என்றே தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் அவருடைய ஆட்டத்தைத் தொடர்ந்து கவனித்தால் இவை குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. எப்போதாவது பெரிய ஸ்கோர் அடிக்கிறார். சுண்டைக்காய் அணி சிக்கினால் சதம் போடுகிறார்.
ஒரு தொடரில் தொடர்ந்து ஆடுகிறார். அடுத்த தொடரில் ரெஸ்ட் எடுக்கப் போய் விடுகிறார். இவற்றை கண்டுகொள்ளாமல் சச்சின் மெத்தனமாக விளையாடுவதால், அவர் சாதனை முயற்சிகளுக்காகத் தான் ஆட்டங்களில் பங்கேற்கிறார் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் துளிர் விடத் துவங்கிவிட்டது.
தற்போதைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. முதல் ஆட்டத்தில் 14 ரன்களும், 2வது ஆட்டத்தில் 4 ரன்களும், 3வது ஆட்டத்தில் 32 ரன்களும் எடுத்தார் சச்சின்.
தொடரின் 4வது போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக இருந்தாலும் அவரது ஆட்டம் ஆமை வேகத்தில் இருந்தது. 68 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்தார். அப்போதும் கூட சச்சின் 7 ரன்களை எடுத்திருந்தால் ஒரு நாள் போட்டியில், 17 ஆயிரம் ரன்களைக் கடந்திருக்கலாமே என்றுதான் பேசப்பட்டதே தவிர, வெற்றிக்கு சச்சின் உதவினாரா, இல்லையா என்று யாரும் பேசவில்லை.
ரசிகர்களின் அதிருப்தியைப் போக்க ஏதாவது செய்யுங்க சச்சின் ...!
கங்குலி கண்டனம்:
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் தெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்ட 'எல்.பி.டபிள்யூ அவுட்' மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இலங்கையைச் சேர்ந்த நடுவர் அசோகா டிசில்வா இந்த 'அவுட்'டை கொடுத்தார். நடுவரின் முடிவுக்கு முன்னாள் கேப்டன் கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
'தெண்டுல்கருக்கு நடுவர் அசோகா டிசில்வா கொடுத்த அவுட் தவறான முடிவாகும். தெண்டுல்கர் பலமுறை நடுவர்களின் மோசமான முடிவால் ஆட்டம் இழந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போதும் நடுவரான அசோகா டிசில்வா எனக்கே 4 முறை தவறான அவுட் கொடுத்தார்' என்று கங்குலி கூறினார்.
முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் நடுவரின் முடிவு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
0 Response to "சுயநலனுக்காக ஆடும் சச்சின்-அதிருப்தியில் ரசிகர்கள்"
แสดงความคิดเห็น