jkr

இலங்கையின் கருத்து குறித்து அமெரிக்கா மௌனம்


இலங்கை மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவ உயர் தளபதியை விசாரணை செய்ய திட்டமிடுகிறது என்று இலங்கை தெரிவித்தமை குறித்து அமெரிக்கா எதுவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்யும் திட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க உள்ளக பாதுகாப்பு திணைக்களத்திடம் கேட்கும்படி அரசாங்கம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரை அழைத்து கோரிக்கை விடுத்துள்ளது.அத்தகைய விசாரணை ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்று அமெரிக்க உள்ளக திணைக்களத்தினால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாதிருக்கிறது என்று திணைக்கள பேச்சாளர் மெற் சன்டிலர் தெரிவித்தார்.ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் அயன் கெலி, இந்த விடயம் தமக்கு சம்பந்தம் இல்லாதது என்று கூறினார்.

அமெரிக்காவில் நிரந்தர வதிவிட அனுமதியும் கிறீன் கார்ட்டும் பெற்றுள்ள இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் பொன்சேகா மத்திய மாநிலமான ஒக்ளஹோமாவில் வாழ்ந்துவரும் அவரது மகள்மாரை பார்ப்பதற்காக தற்போது அங்கு சென்றுள்ளார். அமெரிக்க குடிவரவு விவகாரங்களை கையாளும் உள்ளக பாதுகாப்பு திணைக்களம் பொன்சேகாவை இன்று புதன்கிழமை விசாரணை செய்ய இருப்பதாக கடந்த வாரம் அவருக்கு அறிவித்திருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை பெற்றுக் கொள்ளவே அமெரிக்க அதிகாரிகள் ஜெனரல் பொன்சேகாவை விசாரிக்க முயல்கிறார்கள் என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார். இதேவேளை அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழ் சமூக அமைப்பு ஒன்று ஜெனரல் பொன்சேகா விசாரிக்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க பிரஜைகள் என்ற வகையில் இலங்கையில் நீதியை நிலை நாட்ட தங்கள் அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள இந்த முதலாவது நடவடிக்கை தங்களுக்கு உற்சாகத்தை தருவதாகவும் இலங்கையில் மக்கள் சமத்துவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான வாஷிங்டன் அமைப்பின் பிரதிநிதி அஞ்சலி மணிவண்ணன் தெரிவித்தார்.

இந்த வருட முற்பகுதியில் இலங்கையில் கொல்லப்பட தமிழ் சிவிலியன்களின் தொகை பல்லாயிரக்கணக்காக அதிகரித்தமை குறித்து அமெரிக்கா பரõமுகமாக இருப்பதைக் கண்டு தாங்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் ஒரு அரசியல் தீர்வை பெற்றுத் தருவதில் அமெரிக்கா பெரு முயற்சி எடுக்குமென தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வருடம் நடைபெற்ற சண்டையின் போது 7000 க்கும் அதிகமான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் அதன் படைகளினால் ஒரு சிவிலியயேனும் கொல்லப்பட்டவில்லை என்று வலியுறுத்திக் கூறுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இலங்கையின் கருத்து குறித்து அமெரிக்கா மௌனம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates