jkr

யாழ் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

தென்மராட்சி கிழக்கு கொடிகாமம் இராமாவில் நலன்புரி நிலையத்திலிருந்த 813 பேர் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் மீள்குடியேறும் பொருட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று காலை கொடிகாமம் இராமாவில் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் மற்றும் வலிகாமம் பகுதிகளிலுள்ள 285 குடும்பங்களைச் சேர்ந்த 813 பேரை அவர்களது சொந்த இடங்களுக்குச் சென்று மீள்குடியமர்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் 813 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யாழ். குடா நாட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை இன்னமும் ஓரிரு கிழமைகளில் அவர்களது சொந்த இடங்களுக்குச் சென்று மீள்குடியேறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தற்போது மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான முதற்கட்டக் கொடுப்பனவான 5,000 ரூபாவை வழங்கியதுடன் மீள்குடியேறிய பின்னர் அந்த மக்களுக்கான வாழ்வாதார உதவிகளும் சுயதொழில் வாய்ப்புகளும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்தும் மக்கள் மீள்குடியேறிய பகுதிகளுக்குச் சென்று அந்த மக்களின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை ஆராய்ந்து தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களிலிருந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்த மக்கள் மீள்குடியேறிய பின்னர் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எத்தகைய விதத்திலும் துணைபோக வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலத்தில் தமிழ் பேசும் மக்களைப் பயங்கரவாதச் செயற்பாடுகளை நோக்கி வழிநடாத்திச் சென்றவர்கள் மக்களை இடைநடுவில் கைவிட்டுத் தமது சுயலாபம் கருதி வெளிநாடுகளுக்குச் சென்ற வரலாற்றைக் கண்டுள்ளதாகவும் அதிலிருந்து மக்கள் சரியான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கைதடி பனை வள ஆராய்ச்சி நிலைய நலன்புரி முகாமிலுள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேரும், யாழ்.திருநகர் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேரும் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பனை வள ஆராய்ச்சி நிலைய நலன்புரி கிராமத்திற்கும் யாழ்.திருநகர் நலன்புரி நிலையத்திற்கும் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு சென்று குடியேறுபவர்களுக்கு முதற்கட்ட உதவிப் பணமாக 5000 ரூபாவை வழங்கினார்.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காகத் தெரிவித்த முறைப்பாடுகளையும் வவுனியா நிவாரண முகாம்களில் உறவுகளைப் பிரிந்து வந்த நிலைமைகள் தமது பிள்ளைகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்னும் சிலவாரங்களில் சொந்த இடங்களுக்குச் செல்ல விரும்புபவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்ததுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளை ஆறு மாத காலத்திற்குள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய இந் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீனிவாசன், யாழ்.மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திரு.பிரதீபன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் சார்ள்ஸ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates