மீனவர்கள் 12 மைல் தாண்டினால் சிறை!: புதிய சட்டம்- மீனவர்கள் கடும் எதிர்ப்பு

கடலூர்: கடலில் 12 மைல் (கடல்) தாண்டி மீன் பிடித்தால் ரூ. 9 லட்சம் அபராதமும், 3 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்ற சட்டத்ததை மத்திய அரசு விரைவில் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
'கடல் மீன் தொழில் ஒழுங்கமைப்பு மற்றும் மேலாண்மை சட்டம் 2009' என்ற இச்சட்டத்துக்கான மசோதா, வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
தேசிய நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு, கடலூர் மனித உரிமை மையம் உள்ளிட்ட அமைப்புகள், தமிழ்நாடு மற்றும் புதுவை மீன்பிடித் தொழிலாளர் கூட்டமைப்புடன் இணைந்து இமசோதா குறித்த தகவல்களை மீனவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் முதுநகரில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தேசிய நுகர்வோர் அமைப்புகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நிஜாமுதீன் பேசியதாவது:
மீனவர் சமுதாயத்தை ஆலோசிக்காமல் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சட்டம் நடைமுறைக்கு வந்தால், மீனவர்கள் மட்டுமன்றி, அவர்களைச் சார்ந்துள்ள அனைத்துத் தரப்பினரும் பாதிப்படைவர்.
இச்சட்டத்தின் படி, எந்த மீனைப் பிடிக்கலாம் என்று அரசு சொல்கிறதோ அதை மட்டும் பிடிக்க வேண்டும். எந்த இடத்தில் அரசு அனுமதித்து இருக்கிறதோ அங்கு மட்டுமே மீன் பிடிக்க வேண்டும்.
12 கடல் மைல் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது. கட்டுப்பாடுகளை மீறினால், படகு உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கலாம். 12 கடல் மைல் தாண்டினால் ரூ.9 லட்சம் அபராதம், 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கலாம்.
வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில் கொண்டு, உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்கவே இச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. நுகர்வோர், மனித உரிமை அமைப்புகள், மீனவர் அமைப்புகள் இணைந்து போராடி இம்முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றார் நிஜாமுதீன்.
இந்தச் சட்டம் தமிழக மீனவர்களை குறி வைத்தே கொண்டு வரப்படுவதாகத் தெரிகிறது. சீனா பக்கமாக சாய்ந்து வரும் இலங்கைக்கு ஐஸ் வைக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறதோ என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.







0 Response to "மீனவர்கள் 12 மைல் தாண்டினால் சிறை!: புதிய சட்டம்- மீனவர்கள் கடும் எதிர்ப்பு"
แสดงความคิดเห็น