சென்னை விமான நிலையம்-9 சுங்கத்துறை அதிகாரிகள் கைது

சென்னை: சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவில் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்ட 2 பெண் அதிகாரிகள் உள்பட 9 சுங்கத்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்குப் பிரிவில் இருந்து பல நாடுகளுக்கும் பொருட்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களும் இங்கு சோதனையிடப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்படுகின்றன.
இந்த சரக்குப் பிரிவில் பெரும் முறைகேடுகள் நடந்து வருகின்றன. ஏராளமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையை குறைவாக நிர்ணயித்து குறைவான வரி விதிப்பது, வரியே விதிக்காமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது என இந்த சரக்குப் பிரிவை கண்காணிக்க வேண்டிய சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கடந்த இரு தினங்களாக சிபிஐ அதிகாரிகளின் 5 குழுக்கள் இரவு பகலாக இந்த சரக்கு மையத்தில் சோதனை நடத்தின.
சுங்க இலாகாவினரின் ஆவணங்களையும், சரக்கு ஏஜெண்டுகளின் ஆவணங்களையும் சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்த சுங்கத்துறையினரிடம் இருந்து பல லட்சம் அளவுக்கு லஞ்சப் பணத்தையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 2 பெண் அதிகாரிகள் உள்பட 9 சுங்க இலாகா அதிகாரிகளை மேல் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் இவர்களது வீடுகளிலும் சிபிஐ ரெய்ட் நடத்தியது. அதில் ஒரு அதிகாரியின் வீட்டியில் இருந்து 2 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் இரு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து ரூ. 16 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து 9 சுங்கத்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விவரம்:
பாஸ்கர்-கண்காணிப்பாளர்
அறிவுடை நம்பி-கண்காணிப்பாளர்
நாகேஸ்வரி-கண்காணிப்பாளர்
பழனியப்பன்-கண்காணிப்பாளர்
ஜக்மோகன் மீனா- முன்னெச்சரிக்கை அதிகாரி
ஆசைத்தம்பி-முன்னெச்சரிக்கை அதிகாரி
மஞ்சுளா- முன்னெச்சரிக்கை அதிகாரி
பெஞ்சமின்- முன்னெச்சரிக்கை அதிகாரி
கண்ணன்- வரி உதவியாளர்.
இவர்களோடு ஏஜெண்ட் குமார் என்பவரும் கைதாகியுள்ளார். குமாரின் உதவியாளர் ராஜ்குமார் என்பவர் தப்பியோடிவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
பாஸ்கரன், கண்ணன், குமார் ஆகியோரிடம் மேல் விசாரமை நடத்த சிபிஐ அனுமதி கோரியதால் 3 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.







0 Response to "சென்னை விமான நிலையம்-9 சுங்கத்துறை அதிகாரிகள் கைது"
แสดงความคิดเห็น