நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில்

புலிகளுடனான போரின் போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்தும் முகமாக, எதிர்வரும் டிசம்பர் முதலாந் திகதி அனைத்து நலன்புரி நிலையங்களும் திறந்த முகாம்களாக்க மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
செட்டிக்குளத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ அமைச்சர்களான றிசாத் பதியூதீன், பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இராமநாதன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுடன் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டனர்.
இதனையடுத்து பசில் ராஜபக்ஷ தெரிவிக்கையில்,
"2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆந் திகதிக்குள் நடைமுறையிலுள்ள அனைத்து நலன்புரி நிவாரணக் கிராமங்களிலுமுள்ள மக்கள் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்படுவர்கள். அத்துடன், டிசம்பர் மாதம் முதலாந் திகதி முதல் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக எவ்வித கெடுபிடிகளுமின்றி நடமாடும் வகையில் அவை திறந்த முகாம்களாக மாற்றப்படும்.
தற்போது மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவு 50ஆயிரமாக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.
மேலும் வன்னியிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு அரசாங்கத்தின் பாதுகாப்பைத் தேடி வந்த மக்களுக்கு எமது ஜனாதிபதி தலமையிலான அரச பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளும் முழுமனதுடன் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதை இவர்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.
நிவாரணக் கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80ஆயிரம் மக்களின் தொகை இன்று 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் நேர்மையான தூய்மையான மீள்குடியேற்ற கொள்கையே காரணமாகும்.
அந்த வகையில் கிழக்கு மாகணத்தில் இடம் பெயர்ந்த மக்களை மிகவும் துரிதமாக நாம் மீளகுடியமர்த்தினோம். இன்று பல நாடுகளிலும் அகதி முகாம்கள் பல வருட காலமாக காணப்படுகின்றன. அம்மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் எமது அரசாங்கம் இடம்பெயர்ந்த இம்மக்களது நலனில் அதிகூடிய அக்கறை செலுத்தி உட்கடடமைப்பு வசதிகள் உட்பட ஏனைய தேவைகளையும் பெற்று கொடுத்துள்ளது" என்றார்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனும் உரையாற்றினார்.







0 Response to "நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில்"
แสดงความคิดเห็น