வாழவே முடியாத சூழலில் இலங்கை தமிழர் முகாம்கள்- கனிமொழி திடீர் தகவல்

ஊட்டி: இடம் பெயர்ந்தோர் முகாம்கள் எதுவுமே வாழவே தமிழர்கள் முடியாத சூழலில் உள்ளதாக திடீரென திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இலங்கைக்கு திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழு சென்று திரும்பியது. ராஜபக்சேவை அக்குழு சந்தித்தபோது தமிழர் முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் திருப்தி தருவதாக கூறினர்.
அதேபோல சென்னைக்குத் திரும்பி வந்த பிறகும் கூட முகாம்களில் அவ்வளவு மோசமான நிலை இல்லை என்றுதான் மழுப்பலாக தெரிவித்தனர்.
இக்குழுவில் இடம் பெற்றிருந்த திருமாவளவன் , ராஜபக்சேவை மிகக் கடுமையாக சாடி பின்னர் பேட்டி அளித்தார். மேலும், முகாம்களில் தமிழர்களின் நிலை மிக கேவலமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனால் அதிருப்தியுற்ற திமுக, பிரதமரை சந்திக்க திமுக காங்கிரஸ் எம்.பிக்கள் குழு டெல்லி சென்றபோது திருமாவளவனை அழைத்துச் செல்லவில்லை.
இந்த நிலையில் தமிழர்கள் வாழவே முடியாத சூழல் முகாம்களில் நிலவுவதாக திடீரென கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஊட்டிக்கு வந்த கனிமொழி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னமும் பிரச்னைகளுக்கு மத்தியிலேயே உள்ளனர். இதை முதலில் சீர் செய்ய வேண்டும். அவர்கள் அந்த முகாம்களில் வாழவே முடியாத சூழல் உள்ளது. அவர்கள் நாட்டிலேயே அகதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
இம்மக்களுக்கு ஏராளமான உதவிகள் தேவைப்படுகின்றன. அவற்றை இப்போதே செய்வதைவிட அவர்களை அங்கிருந்து வெளியேற்றி வெளியில் குடியேற்றம் செய்த பின்னர் தேவையான உதவிகளை வழங்கலாம். குறிப்பாக விவசாயம் போன்றவற்றிற்கு அதிகளவில் உதவிகள் தேவைப்படுகின்றன.
58,000 பேர் மறு குடியமர்த்தப்பட்டு விட்டனர்...
இதுவரை 58 ஆயிரம் பேர் முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோரையும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் டிசம்பர் மாதத்திற்குள் குடியேற்றம் செய்துவிட வேண்டும்.
அவர்களது சொந்தப் பகுதிகளில் மருத்துவ வசதிகள், தொழில் வாய்ப்புகள் போன்றவற்றிற்கும் உதவ வேண்டும்.
இந்திய எம்பிக்கள் குழுவினர் பார்வையிட்ட முகாம்களோடு அங்கு தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள எந்த முகாமும் சிறப்பாக இல்லை என்றார் கனிமொழி.
58 ஆயிரம் மறு குடியமர்த்தப்படுவர் என திமுக காங்கிரஸ் குழுவின் தமிழக வருகைக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இதுகுறித்து இதுவரை இலங்கை அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத நிலையில், 58 ஆயிரம் பேர் மறு குடியமர்த்தப்பட்டு விட்டதாக கனிமொழி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.







0 Response to "வாழவே முடியாத சூழலில் இலங்கை தமிழர் முகாம்கள்- கனிமொழி திடீர் தகவல்"
แสดงความคิดเห็น