செய்தியறிக்கை
| | |
| தேர்தலில் முறைகேடுகள் என குற்றச்சாட்டு |
ஆப்கானிஸ்தான் தேர்தல் முறைகேடுகளை ஒப்பு கொண்டுள்ளார் ஐ.நா தூதர்
ஆப்கானிஸ்தானில் செயற்படும் ஐ.நாவின் தலைவரான கேய் எய்டி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதர்கள் புடை சூழ செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தோன்றியுள்ளார். அவருக்கு இருக்கும் சர்வதேச நாடுகளின் ஆதரவை காண்பிப்பதற்காகவே இவ்வாறு தோன்றியதாக பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகளை கேய் எய்டி குறைத்து காண்பித்ததாக, முன்னாள் துணை தலைவராக இருந்த பீட்டர் கால்பிரைத் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தவுடன் பீட்டர் கால்பிரைத் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கேய் எய்டி, தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதை ஒப்பு கொண்டுள்ளார், ஆனால் முறைகேடுகள் தொடர்பான சில தகவல்களை ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஐ.நா கொடுத்து விட்டதாகவும் கேய் எய்டி கூட்டத்தில் கூறினார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறது - பிரிட்டன் மற்றும் அமெரிக்கா
| | |
| பாகிஸ்தான் அணு உலை ஒன்று |
தலிபான்களின் அச்சுறுத்தல் இருந்தாலும், பாகிஸ்தானின் அணுஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ராவல்பிண்டியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது என கூறினார்.
ஆனால் ஆயுததாரிகள் பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலர் டேவிட் மிலிபேண்ட் கூறும்போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்ந்து விடும் என்ற பிரச்சினையே இல்லை என தெரிவித்தார்.
ராவல்பிண்டி தாக்குதலுக்கு அல்குவைதா மீது பாக் குற்றச்சாட்டு
| | |
| இராணுவ தலைமையகம் மீது தாக்குதல் |
பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் இராணுவத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் பாகிஸ்தானிய தாலிபன் குழுவினர் மீதும் அல் குவைதா இயக்கம் மீதும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
கமோண்டோ படையினர் தலைமையகக் கட்டிடத்தின் மீது ஞாயிற்றுகிழமை அதிகாலை அதிரடித் தாக்குதலொன்றை நடத்தி அங்கு பிணையக் கைதிகளாக இருந்த நாற்பது பேரை மீட்டுள்ளனர்.
அரசாங்கம் தனது பதில் நடவடிக்கைக் குறித்து ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் ஆயுததாரிகளின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு வசிரிஸ்டதான் பகுதி மீதான இராணுவ நடவடிக்கை உறுதியானது எனவும் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு வசிரிஸ்தான் பகுதி மீது அண்மைய வருடங்களில் நடத்தப்பட்ட அரசாங்கத்தின் மூன்று படை நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடிவடைந்ததாகவும் இம்முறை நடவடிக்கை இலகுவாக அமைந்துவிடும் என்று எவரும் கருத முடியாது எனவும் பி.பி.சியின் தெற்காசிய பிராந்திய செய்தியாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அர்மினாவுடனான எல்லையை திறக்க துருக்கி பிரதமர் நிபந்தனை
| | |
| துருக்கி மற்றும் அர்மினியா |
அர்மினியாவுடனான எல்லையை திறப்பதற்கான ஒப்பந்தம் குறித்து துருக்கி பிரதமர் ரெசப் தயப் எர்டோகன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அசர்பெஜானில் இருந்து அர்மினிய துருப்புகள் வெளியேறினால் மட்டுமே எல்லை திறக்கப்படும் என்று துருக்கி பிரதமர் தெரிவித்துள்ளார்.
அசர்பெஜானில் அர்மினியர்கள் வசிக்கும் நகோர்னோ கராபாக் பகுதியை அர்மினிய துருப்புகள் பாதுகாத்து வருகின்றனர்.
நகோர்னோ கராபாக் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் வரையில் எல்லையை திறக்கும் ஒப்பந்தத்திற்கு துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்காது என்றும் துருக்கி பிரதமர் எர்டோகன் கூறியுள்ளார்.







0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น