தமிழக வியாபாரிகள் கைது : குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய திங்கள் வரை கால அவகாசம்

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்து இந்திய வியாபாரிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றம் பொலிசாருக்கு வழங்கிய கால அவகாசம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாக வாகரைப் பொலிசாரால் கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை சந்தேகத்தின் பேரில் வீடொன்றில் வைத்து விற்பனைப் பொருட்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இராமையா மகாலிங்கம், மாரியப்பன் அழகுசாமி, மாரியப்பன் முருகேசன், வெங்கடாசலம் முனியாண்டி, சின்னவேலு இராமு ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
கடந்த புதன்கிழமை இந்நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தலா ரூபா 50 ஆயிரம் ஆட் பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இவர்கள்து கடவுச் சீட்டுக்களை நீதிமன்ற காவலில் வைத்து, இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்ட்டிருந்தது.
சந்தேக நபர்கள் நேற்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் மீண்டும் ஆஜரான போதிலும் பொலிசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை அதற்கான அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்தைப் பொலிசார் கோரினர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பொலிசாருக்கு அவகாசம் வழங்கி, சந்தேக நபர்கள் மீதான பிணையை, அதுவரை நீடிக்கும் உத்தரவையும் பிறப்பித்தார்.







0 Response to "தமிழக வியாபாரிகள் கைது : குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய திங்கள் வரை கால அவகாசம்"
แสดงความคิดเห็น