பங்களாதேஷ் பிரதமருக்கு இந்திரா காந்தி சமாதான விருது
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திராகாந்தி சமாதான விருதை, இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.
2009ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி சமாதான விருதுக்காக, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (62 வயது) தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு பத்திரமும் இவருக்கு வழங்கப்பட்டத்ன். விருது வழங்கும் விழா, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல், ஷேக் ஹசீனாவுக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். விருதை பெற்றுக் கொண்ட ஷேக் ஹசீனா பேசுகையில்,
"மிகப்பெரிய தலைவரின் பெயரில் அமைந்துள்ள விருது எனக்கு வழங்கப்படுவதை பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். அதற்கான தகுதிகள் எனக்கு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டபோது, எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் தவித்தோம்.
இந்திரா காந்தி தாய் போன்றவர்
பங்களாதேஷ் அரசு எங்களை நாடு திரும்ப அனுமதிக்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்களை ஆதரித்த ஒரே தலைவர், இந்திராகாந்திதான். 6 ஆண்டுகாலம் டெல்லியில் எங்களுக்கு அரசியல் புகலிடம் தந்து அரவணைத்த இந்திராகாந்தி உண்மையிலேயே எனது தாய் போன்றவர்.
அண்டை நாடுகளுடன் நட்புரீதியான நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறோம். அமைதி, நல்லிணக்கம், வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட தெற்காசியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். எனது நாட்டை தீவிரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கவும், மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கவும் உறுதி பூண்டிருக்கிறேன்''. என்றார்.
பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் பேசும்போது, பங்களாதேஷின் குரலுக்கு உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், பங்களாதேஷ் மண்ணின் மிகச்சிறந்த புதல்வி மட்டுமின்றி, உலகின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரை இந்தியா சார்பில் கௌரவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சோனியா புகழாரம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, இந்திராகாந்தியை போன்ற தைரியமான ஒரு பெண்மணியை இந்தியா கௌரவிப்பதாகப் புகழாரம் சூட்டினார்.
இந்திரா காந்தியைப்போல், தனது தந்தையின் வழியைப் பின்பற்றியவர் ஹசீனா. மாணவ பருவத்தில் இருந்தே போராளியாகத் திகழ்ந்த ஹசீனா, முழு குடும்பத்தினரையே இழக்கும் அளவுக்கு வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்தவர் என்றும் சோனியா குறிப்பிட்டார்.
0 Response to "பங்களாதேஷ் பிரதமருக்கு இந்திரா காந்தி சமாதான விருது"
แสดงความคิดเห็น