செனல்4 விவகாரம் தொடர்பான ஐ.நாவின் அறிக்கை விதிமுறைகளை மீறும் செயல்-ரோஹித்த போகொல்லாகம
செனல் 4 தொலைக்காட்சி வீடியோ படம் தொடர்பான விசாரணை அறிக்கையினை ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் அல்ஸ்டன், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாது வெளியிட்டமை இராஜதந்திர நடைமுறைகளை மீறும் செயலாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
நீதிவிசாரணையற்ற கொலைகள்,தன்னிச்சையான மரணதண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் விசேட அறிக்கையாளர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன், சர்ச்சைக்குரிய சனல் 4 வீடியோ படம் தொடர்பாக விசாரணை செய்த 3 அங்கத்தவர் கொண்ட குழுவின் முடிவு குறித்து இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும் முன்னரே அதனை பகிரங்கப்படுத்திவிட்டார் என்று இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காட்சிகள் உண்மையானவை என்பது நிரூபணமாகியுள்ளதாக அல்ஸ்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அல்ஸ்ரனின் செயல் இராஜதந்திர நடைமுறைகளை மீறுவதாக அமைந்தள்ளது என்று கூறியுள்ளார். நியூயோர்க்கில் வெளியிடப்பட்ட பகிரங்க அறிக்கை ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் சகல நடைமுறைகளுக்கும் நீதி நியாய விதிமுறைகளுக்கும் முரணானது என்பதை விசேட அறிக்கையாளருக்கும் ஐக்கியநாடுகள் செயலகத்திற்கும் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த விவகாரத்தை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ பதில் ஒன்றை அனுப்பிவைக்க அவகாசம் வழங்கும் வகையில் உரிய நடைமுறை பேணப்பட்டிருக்க வேண்டும்.
முதலில், சுயாதீன நிபுணர்களின் முடிவை பேராசிரியர் அல்ஸ்ரன் எமது அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டியதே சரியான நடைமுறையாகும். அதன் பின்னர், எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்கு முன்னர், நிபுணர்களின் முடிவுக்கு பதிலளிக்க அரசாங்கத்திற்கு அவர் போதிய அவகாசம் அளித்திருக்க வேண்டும்.
வீடியோ காட்சியை பரிசோதனை செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் நிச்சய தன்மை குறித்தும் அவர்களது கண்டுபிடிப்பு குறித்தம் சந்தேகம் உள்ளது. நிபுணர்களின் கணடுபிடிப்பு பல பொருளை தருகிறது. உதாரணமாக, ஒரு நிபுணர் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ முழுமையாக நம்பகமானது என்று உறுதிப்படுத்த முடியாது.
இலங்கையில் நடைபெறவிருக்கும் தேர்தலில் செல்வாக்கை பிரயோகிப்பதற்காக தமது நிபுணர்களின் கண்டுபிடிப்பை விசேட அறிக்கையாளர் அலட்சியப்படுத்தியுள்ளார். எனவே, பேராசிரியர் அல்ஸ்ரனின் அவசரம், விவகாரத்தை பகிரங்கப்படுத்தும் எண்ணம், நடைமுறையையும் அவரது நிபுணர்களின் அபிப்பிராயத்தையும் அலட்சியப்படுத்தல் ஆகியன அவர் எமது நாட்டின் மீதும் நடைபெற இருக்கும் தேசிய தேர்தல்கள் மீதும் குறிவைக்கிறாரா என்ற சந்தேகத்தை தருகின்றன.
0 Response to "செனல்4 விவகாரம் தொடர்பான ஐ.நாவின் அறிக்கை விதிமுறைகளை மீறும் செயல்-ரோஹித்த போகொல்லாகம"
แสดงความคิดเห็น