ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றால் பிரபாகரன் மீண்டும் உயிர்பெறுவார்-வீரவன்ச தெரிவிப்பு;
ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேசத் துரோக கும்பல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுமாயின் மரணித்த புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீண்டும் உயிர் பெறும் நிலையே உருவாகும். எனவே, மேலதிகமான இரண்டு இலட்சம் வாக்குகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்..
புலிகள் இயக்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்ட அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இன்று ஜெனரல் சரத் பொன்சேகாவினை வெற்றி பெற வைப்பதற்கு பாரியளவு நிதியினை செலவிட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்றப் போதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூட்டணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்ததன் மூலம் தேசத் துரோக கும்பல் தனது பரிபூரண நிலையை அடைந்துள்ளது. பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்கள் என்பனவற்றை வடக்கிலிருந்து முற்றாக அகற்றல், சுயாட்சியை ஏற்படுத்தல்,வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்தல், சிறையில் உள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் உட்பட பல்வேறு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஜெனரல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டுள்ளார்..
இதனையே பிரபாகரனுடன் இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் ரணில் விக்கிரமசிங்கவும் செய்தார். தற்போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேசத் துரோக கும்பல் மேற்கொள்ள உள்ள காட்டிக் கொடுப்பை போல இலங்கை அரசியல் வரலாற்றில் வேறொரு சந்தர்ப்பம் அமைந்திருக்காது. புலிகள் இயக்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய இன்று ஜெனரல் சரத் பொன்சேகா செயற்பட்டு வருகின்றார். இதற்கு சர்வதேச நாடுகள் பின்னணியில் நின்று செயற்படுகின்றன. புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்களில் ஒருவரான ருத்திரகுமார் 2010 ஆம் ஆண்டுக்கான வருட வாழ்த்து செய்தியில் தமது போராட்டம் வேறு வழியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். தேசப்பற்றை வாய் நிறைய பேசும் ஜே.வி.பி. இன்று புலிகளின் தேவையை பூர்த்தி செய்ய ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கி வருகின்றது. எனவே எதிர்வரும் 26 ஆம் திகதி தவறுதலாகக் கூட அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.
0 Response to "ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றால் பிரபாகரன் மீண்டும் உயிர்பெறுவார்-வீரவன்ச தெரிவிப்பு;"
แสดงความคิดเห็น