jkr

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்




  1. வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் குறைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.
    வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றவேண்டும் என தமது கோரிக்கைக்கு ஜனாதிபதியின் தரப்பில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் காரணமாகவே மீள்குடியேற்றம் தாமதமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    இந்தநிலையில் முகாம்களில் உள்ள அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1990 ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெயர்ந்த வலிகாமம் வடக்கு மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
    இந்தப்பேச்சுக்களின் போது கடந்த மூன்று மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இதற்குப் பதிலளித்த மகிந்த, சில விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்து அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பது நிரூபணமானால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.
    இந்தநிலையில் சில விடயங்களை விரைவாகவும் சில விடயங்களை படிப்படியாகவும் செய்வதாகவும் ஜனாதிபதியின் தரப்பு உறுதி வழங்கியதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
    ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக விரைவில் ஜனாதிபதி நடவடிக்கை செயலணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    இந்தநிலையில் ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையின் பிரதிபலன்கள் நடைமுறைப்படுத்தப்படும் போதே பார்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
    இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற இரண்டரை மணித்தியால பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச, அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியின் செயலாளர், வன்னி அகதி முகாம்களுக்கு பொறுப்பான படையதிகாரி உட்பட்டோர் பங்கேற்றனர்.
    தமிழதேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, இமாம், சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், தங்கேஸ்வரி, துரைரட்ணசிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates