கணவர் தாக்கப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் மனைவி முறைப்பாடு

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா இணைப்பு அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன இதனைத் தெரிவித்துள்ளார். பஸ் உரிமையாளர் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பாக வவுனியா பொலிஸார் தனது கணவரை விசாரணைக்கென அழைத்துச் சென்றபோதே இவ்வாறு தாக்கப்பட்டிருக்கின்றார் என அவரது மனைவி முறையிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.கண், முகம், நெஞ்சு மற்றும் பிறப்புறுப்பு பிரதேசம் என்பவற்றிலேயே தனது கணவர் தாக்கப்பட்டுள்ளதாக மனைவியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி பிரியதர்சன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் முச்சக்கர வண்டி ஓட்டுனர் என்றும் அவர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட தனது கணவரை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது, அவர் தனக்கு நேர்ந்தவற்றை நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவர் நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா இணைப்பு அலுவலகத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டார்.







0 Response to "கணவர் தாக்கப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் மனைவி முறைப்பாடு"
แสดงความคิดเห็น