இலங்கைத் தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் கையில்:பிரதமர் கெவின் ரூட்

இலங்கைத் தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கையில் உள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி வந்த 78 தமிழர்களை அவுஸ்திரேலியக் குழுவினர் தடுத்து நிறுத்தி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும் இந்தோனேஷிய அரசாங்கம் இவர்களை ஏற்கமறுத்துவரும் நிலையில் 78 பேருக்கும் கொள்கை அளவில் புகலிடம் தர அவுஸ்திரேலியா ஒப்புக் கொண்டது.12 வாரங்களுக்குள் 78 பேரையும் குடியேற்றம் செய்யவும் அது முன்வந்தது.
இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலிலிருந்து 22 தமிழர்கள் நேற்று வெளியேறியுள்ளனர்.ஏனைய 56 பேரும் கப்பலிலேயே உள்ளனர். 22 பேரையும் தான்சுங் பினாங்கில் உள்ள குடியேற்றப் பிரிவு மையத்திற்கு இந்தோனேசியா அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் 78 பேரின் எதிர்காலம் ஐ.நா. அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கையில் உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கெவின் ரூட் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," அனைத்து அரசியல் புகலிடம் கோரும் தமிழர்களின் கோரிக்கையை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும், முறைப்படியும் நாங்கள் அணுகுவோம்.
இருப்பினும் தனி நபர்களின் புகலிடக் கோரிக்கை குறித்து முதலில் கவலைப்பட வேண்டியது ஐ.நா. அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயம் தான்.. இரண்டாவது அகதிகளை ஏற்பது தொடர்பாக ஐ.நா. பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 15 நாடுகளுடையதாகும்.இந்த முறைப்படி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை நாங்கள் அணுகுவோம்" என்றார்.







0 Response to "இலங்கைத் தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் கையில்:பிரதமர் கெவின் ரூட்"
แสดงความคิดเห็น