அசார் மீதான கிரிக்கெட் தடை - நீக்க காங். முயற்சி

டெல்லி: முன்னாள் கேப்டனும், இன்னாள் எம்.பியுமான அசாருதீனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சரத்பவாரை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். கடந்த 2000மாவது ஆண்டு கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கினார் அசாருதீன். இதையடுத்து அவருக்கு ஆயுட் கால தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்தது.
தற்போது அசாருதீன் காங்கிரஸ் காரராக இருக்கிறார். உ.பி. மாநிலம் மொராபாத் தொகுதியிலிருந்து எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி மூலமாக தன் மீதான தடையை நீக்க களம் இறங்கியுள்ளார் அசார்.
உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் அசார் மீதான வாழ்நாள் தடை நியாயமற்றது என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதேபோன்ற புகாரில் சிக்கிய பல வீரர்கள் மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே அசாருக்கு மட்டும் தடையை நீடித்து வருவது சரியல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஜிதின் பிரசாத், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், கிரிக்கெட் வாரிய நிதிக் கமிட்டி தலைவருமான ராஜீவ் சுக்லா, ராஜ்பாபர் ஆகியோர் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், சர்வதேச கிரிக்கெட் சங்க துணைத் தலைவருமான சரத் பவாரை சந்தித்து தடையை நீக்கக் கோரியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து அசாருதீனுக்கு ஆதரவாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதால் கிரிக்கெட் வாரியம் அசாருதீன் மீதான தடையை நீக்க கிரிக்கெட் வாரியம் யோசிக்கலாம் என்று கருதப்படுகிறது.







0 Response to "அசார் மீதான கிரிக்கெட் தடை - நீக்க காங். முயற்சி"
แสดงความคิดเห็น