முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கை, இந்தியா நாளை மோதல்
இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதுவரை 4 “லீக்” ஆட்டங்கள் முடிந்துள்ளன. இலங்கை அணி 3 ஆட்டத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. வங்காளதேசம் 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது.
5-வது லீக் ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்று இருந்தது. தற்போது 2-வது முறையாக நாளை சந்திக்கிறது. இலங்கையிடம் தோற்றதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.
வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, வீரட் கோக்லி, சுரேஷ் ரெய்னா முத்திரை பதித்தனர்.
இந்திய வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதை சரி செய்தால் வெற்றியை பெற இயலும். பேட்டிங்கையே அதிகமாக நம்ப வேண்டி உள்ளது.
புதுமுக வீரர்களின் காயம் காரணமாக ஜெயவர்த்தனே அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது.
நேற்றைய வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரும், தரங்காவும் சதம் அடித்தனர். இந்தியாவுடன் ஒப்பீடுகையில் அந்த அணி பந்துவீச்சில் பலம் பெற்று காணப்படுகிறது.
இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பனி காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதே காரணமாகும். இதனால் எந்த அணி “டாஸ்” வென்றாலும் 2-வது பேட்டிங் செய்வதை விரும்பும்.
இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது போட்டியாகும். இதுவரை நடந்த 119 போட்டியில் இந்தியா 63 ஆட்டத்திலும், இலங்கை 45 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
0 Response to "முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கை, இந்தியா நாளை மோதல்"
แสดงความคิดเห็น