சச்சினின் சாதனைக்கு தடைபோட்ட நடுவர்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 17 ஆயிரம் ரன்களைக் கடப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், நடுவரின் தவறான முடிவால் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு எப்படி வேண்டுமானால் இருக்கும், ஆனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 17 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் படைப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆஸ்ட்ரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பாக இச்சிறப்பை பெற 87 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் முதல் 3 ஆட்டங்களிலும் (14, 4, 32) அவர் ஜொலிக்கவில்லை.
இந்நிலையில் மொகாலியில் நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியின் போது 47 ரன்கள் சேர்த்தால் 17 ஆயிரம் என்ற இலக்கை கடக்கலாம் என்ற சூழல் இருந்தது. இதனைக் கவனத்தில் கொண்டு சச்சின் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் விளையாடினார். ரசிகர்களும் அவரது சாதனையை காண ஆவலாக இருந்தனர்.
சாதனையை நெருங்கிய நேரத்தில் டெண்டுல்கருக்கு, நடுவரின் வடிவில் தடை ஏற்பட்டது. அவர் 40 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது நாதன் ஹவுரிட்ஸ் சுழற்பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இலங்கை நடுவர் அசோகா டி சில்வா இந்த அவுட்டை வழங்கினார்.
ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து எந்த ஸ்டம்பையும் தாக்காமல் லெக்-ஸ்டம்புக்கு வெளியே போவது தெளிவாக இருந்தது. தவறான அவுட் கொடுக்கப்பட்டதால் டெண்டுல்கர் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். அவர் சாதனை படைக்க இன்னும் 7 ரன்கள் தேவைப்படுவதால் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் அவர் புதிய சாதனை படைப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.







0 Response to "சச்சினின் சாதனைக்கு தடைபோட்ட நடுவர்"
แสดงความคิดเห็น