jkr

தஞ்சாவூரில் எரிசாராய ஆலை : எதிர்த்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில் எரிசாராய ஆலை திறக்க முயற்சிப்பதைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஒரத்தநாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மத்திய அமைச்சராக இருந்த போது தன்னுடைய நிறுவனங்களுக்காக 4.5 லட்சம் க்யூபிக் மீட்டர் வாயுவை மத்திய அரசிடமிருந்து பெற்ற டி.ஆர். பாலு, தற்போது தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில், விவசாயத்தை பாதிக்கக் கூடிய, நீராதாரத்தை அழிக்கக் கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

பின்தங்கிய வடசேரி பகுதியில் தொழில் தொடங்கப் போவதாக ஊராட்சிக்குத் தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்ற வைத்திருக்கிறார் டி.ஆர். பாலு. இந்தத் தீர்மானம் மாவட்ட ஆட்சித் தலைவரின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி ஊராட்சி மன்றத் தலைவரிடம் மக்கள் முறையிட்ட போது,

"தீர்மானம் போடத்தான் அதிகாரம் உள்ளதே தவிர, தீர்மானத்தை ரத்து செய்ய அதிகாரமில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் தான் அதை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறி அவர் ஒதுங்கிக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி நிறுவனத்தில் தற்போது ஒன்பது ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ளதாகவும், இந்த ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து எடுத்து பயன்படுத்தும் நீர் கழிவாக வெளியேற்றப்படும் என்றும், இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் எரிசாராய ஆலை தொடங்கப்பட்டால், ஆறே மாதத்தில் விவசாயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும், விவசாயக் கிணறுகளிலும் நீர் முற்றிலும் வற்றிவிடும் என்றும், இதன் விளைவாக 5000 ஹெக்டயர் நிலங்கள் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் எதிர்ப்பை மீறி, பணிகளை துரிதமாக மேற்கொண்டு வரும் டி.ஆர். பாலுவைக் கண்டித்தும்-

விளை நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை கடுமையாக பாதிக்கக் கூடிய, சுவாச நோயை ஏற்படுத்தக் கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைய உறுதுணையாக இருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும்-

மக்களின் நலன் கருதி எரிசாராய தொழிற்சாலை அமைய அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் அதிமுக சார்பில் நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்."

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தஞ்சாவூரில் எரிசாராய ஆலை : எதிர்த்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates