சுகாதார சிற்றூழியர்கள் இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு வழங்க உத்தேசித்துள்ள சுகாதார சிற்றூழியர்கள் நியமனத்தில் தங்களுக்கு நியாயம் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து இன்று நண்பகல் மட்டக்களப்பு நகரில் நூற்றுக்கணக்கான சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பேரணியொன்றையும் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாகாண சபை உறுப்பினர்களான அ.சசிதரன், இரா.துரைரட்ணம் மற்றும் ஏ.ரீ.மாசிலாமணி ஆகியோரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே 2005ஆம் ஆண்டு சுகாதார சிற்றூழியர்களாக நியமனம் பெறுவதற்காக தெரிவான சுகாதாரத் தொண்டர்கள் உட்பட 250க்கு மேற்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் இந்த கவனஈர்ப்பு போராட்டத்திலும் பேரணியிலும் கலந்துகொண்டனர் மாகாண சபை வழங்க உத்தேசித்துள்ள இந்நியமனத்தில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு வெளியாரும் நியமனம் பெறவிருப்பதாகப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுகாதாரத் தொண்டர்கள் குற்றம் சுமத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மாகாண வைத்தியசாலைகள் ஆகியவற்றில் சேவையாற்றும் குறிப்பிட்ட சுகாதாரத் தொண்டர்கள் இன்று முற்பகல் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணத்தின் காரியாலயம் முன்பாக ஒன்றுகூடினர். அங்கிருந்து நகர வீதிகள் வழியாக மாகாண சுகாதார சேவைகள் பிராந்தி அலுவலகம் வரை பேரணியொன்றை நடத்தினர். இப்பேரணி முடிவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகத்தைச் சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரைக் கையளித்தனர் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நடத்திய இக்கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பான மகஜரில், எதிர்வரும் 26ஆந் திகதிக்கு முன்னதாக சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் 28ஆந் திகதி முதல் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்ம் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Response to "சுகாதார சிற்றூழியர்கள் இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்"
แสดงความคิดเห็น