விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருமுறை தலைதூக்குவார்கள் என்பதை மறுக்க முடியாது - எம்.கே.நாராயணன்
மாநிலங்களின் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர்கள் மாநாட்டில் உரையாற்றும்போதே நாராயணன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு நிதியை வழங்கி வந்தவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள். விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருமுறை தலைதூக்குவார்கள் என்பதை மறுக்க முடியாது.
விடுதலைப் புலிகளுக்கான நிதி வழங்கல் வழிகள் இன்னும் யாராலும் தொடப்படாமல் அப்படியே உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மனக்குறையுடன் இருக்கக்கூடிய சிலர் பயங்கரவாதக் குழு மீண்டும் ஒருங்கிணைவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் உதவி செய்வதற்காக ஒருங்கிணையக்கூடும்.
அந்த மாதிரியான ஏதாவது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அத்துடன், எதனையும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு நாராயணன் மேலும் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கோவளம் கடற்கரையோர நட்சத்திர விடுதி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடிப் பேசி இருந்தார்கள் என புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்ததைத் தொடர்ந்து நாரயணனின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
கேரள கடல் வழியாக விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு ஊடுருவக்கூடும் என்ற அச்சம் காரணமாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.







0 Response to "விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருமுறை தலைதூக்குவார்கள் என்பதை மறுக்க முடியாது - எம்.கே.நாராயணன்"
แสดงความคิดเห็น