நாளைய போட்டியில் வெல்லப் போவது இந்தியாவா? இலங்கையா?
மும்முனைக் கிரிக்கெட் போட்டி பங்களாதேஸில் நடைபெற்று வருகிறது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நாளை (13-ஆந்திகதி) நடைபெறுகிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போதைய இந்திய அணி மிகவும் பலமாக இருப்பதால் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோக்லி, காம்பீர், தலைவர் டோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் துடிப்புடன் உள்ளனர்.
கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் நாளைய இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்குத் திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும். கடந்த 2வது ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார்.
சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெக்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்குக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டது.
அவருக்கு பதிலாக இடம் பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டியில் ஹர்பஜன்சிங்கா? மிஸ்ராவா? என்பதை டோனிதான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவாலாகத் திகழும். அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் துருப்பு சீட்டாக உள்ளார். அவர் களத்தில் இருக்கும்வரை இலங்கையின் ஓட்டதொகையை கட்டுப்படுத்த முடியாது. தலைவர் சங்ககாரா, தொடக்க வீரர் தரங்கா ஆகியோரும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.
சமரவீர, முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலுகேந்தரா, ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.30 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும்.
0 Response to "நாளைய போட்டியில் வெல்லப் போவது இந்தியாவா? இலங்கையா?"
แสดงความคิดเห็น