கரு ஜயசூரிய இன்று மட்டக்களப்பு விஜயம்:த.தே.கூ உறுப்பினர்களுடனும் சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.இவ்விஜயத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்து அவர் ஆராய்ந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்ணம் சசிதரன் (மாகாண சபை உறுப்பினர்) இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே ,அலோசியஸ் மாசிலாமணி ,மாவட்ட பிரதி முகாமையாளர் எம்.எல்.அப்துல் லத்தீப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா தமது கட்சி முன் வைத்தமைக்கான காரணங்கள் குறித்து கரு ஜயசூரிய விளக்கமளித்தார்.
"தேர்தல் காலத்தில் ஆளும் கட்சியினரால் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சந்திக்க வேண்டி ஏற்படலாம். இதற்கெல்லாம் ஜனநாயக ரீதியில் நாம் முகம் கொடுக்க வேண்டும் " என்றும் இச்சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கட்சியின் பிரமுகர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமது கட்சி பிரமுகர்கள் ,ஆதரவாளர்களிடமிருந்து பெறும் கருத்துக்களை எதிர்வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தான் முன் வைக்கவிருப்பதாகவும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
0 Response to "கரு ஜயசூரிய இன்று மட்டக்களப்பு விஜயம்:த.தே.கூ உறுப்பினர்களுடனும் சந்திப்பு"
แสดงความคิดเห็น