பன்றிக் காய்ச்சல் நோயாளி மட்டக்களப்பில் மரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் (H1N1) வைரஸ் நோயினால் பீடிக்கப்பட்டு இனங்காணப்பட்ட முதலாவது நோயாளர் நேற்று நள்ளிரவு மரணமானார்.
சத்துருக்கொண்டானைச் சேர்ந்த கே.பாக்கியராஜா (வயது 45) என்ற இந்நோயாளி நோய் அறிகுறிகளுடன் கடந்த 27 ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இவரது இரத்த மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இவர் நோய் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி இலங்கையில் பன்றிக் காய்ச்சல் நோயினால் சுமார் 450 பேர் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆராய்வதற்காக வைத்திய அதிகாரிகள்,சுகாதார சேவை திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடொன்று இன்று போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாத இறுதியில் இந்நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் திருகோணமலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Response to "பன்றிக் காய்ச்சல் நோயாளி மட்டக்களப்பில் மரணம்"
แสดงความคิดเห็น