jkr

செய்தியறிக்கை


இரானில் மூத்த மதகுரு ஒருவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு

மறைந்த அயோதுல்லா மொண்டசாரி
மறைந்த அயோதுல்லா மொண்டசாரி
கடந்த ஞாயிறன்று காலமான இரானின் செல்வாக்கு மிகுந்த, அரசுக்கு எதிரான கொள்கையை கொண்டிருந்த அதியுயர் மதத்தலைவர்களில் ஒருவரான அயதொல்லா ஹொசைன் அலி மொண்டசாரிக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுத்த மூத்த மதகுரு ஒருவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளதாக எதிர்க்கட்சியினரின் இணையத்தளங்கள் கூறுகின்றன.

இஸ்ஃபகானில் நடந்த வைபவத்தில் பொதுமக்கள் கலந்துகொள்வதை பாதுகாப்புப் படையினர் தடுத்த போது மோதல்கள் வெடித்ததாக அந்த இணையத்தளங்கள் கூறுகின்றன.

திங்களன்று குவாமில் நடந்த அஞ்சலி நிகழ்வும் இடையூறு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சியினரின் போராட்டங்களுக்கான ஆதரவு பல இடங்களுக்கும், முதியவர்கள் மற்றும் மத ரீதியிலான பழமைவாதிகள் மத்தியிலும் பரவுவதாகத் தென்படுவதாக பிபிசியின் தெஹ்ரானுக்கான நிருபர் கூறுகிறார்.


இந்திய விசா நடைமுறைகளில் புதிய விதிமுறைகள்

இந்தியாவில் விசா முறைகளில் மாற்றம் வருகிறது
இந்திய விசா முறைகளில் மாற்றம் வருகிறது
இந்தியாவுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள், இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில், நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது.

விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

முன்னைய விதிகளின்படி 5 முதல் 10 வருட கால விசாவை வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்குள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

வணிக மற்றும் தொழில் விசாக்களைப் பெறுவதற்கான கஸ்டமான நடைமுறைகளை தவிர்ப்பதற்கான குறுக்கு வழியாக இதனை பல வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் பயன்படுத்துகின்றனர்.

இந்த மாற்றங்கள் சீரற்ற வகையில் பிரயோகிக்கப்படுவதாக கூறுகின்ற டெல்லிக்கான அமெரிக்கத் தூதரகம், தமது நாட்டவர்கள் பலரை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது


போப் 12 ஆவது பயஸுக்கு புனிதர் பட்டம் வழங்க நடவடிக்கை

போப் 12 ஆவது பயஸ்
போப் 12 ஆவது பயஸ்
நாசிக்கள் காலத்தில் போப்பாக இருந்த 12 ஆவது பயஸ் அவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பான தனது நடவடிக்கைகளை வாத்திகன் நியாயப்படுத்தியுள்ளது.

இது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கக் கூடாது என்று அது கூறியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தடுக்க போப் 12 ஆவது பயஸ் தேவையானவற்றை செய்யவில்லை என்று யூதக் குழுக்கள் குறை கூறுகின்றன.

புனிதர் பட்டம் என்பது, போப் பயஸ் அவர்கள் வெளிக்காட்டிய மாண்புகளை வைத்து கொடுக்கப்படுவதாக இருக்கும் என்றும் அவர் எடுத்த வரலாற்றுப் பூர்வ முடிவுகளின் அடிப்படையில் இருக்காது என்றும் வாத்திகன் கூறியுள்ளது.

இந்தப் பிரச்சனை, யூதர்களுக்கும், ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் வாத்திகன் கூறியுள்ளது.


மீண்டும் மோட்டார் கார்பந்தய போட்டிகளில் ஷூமாக்கர்

ஷூமேக்கர்
மீண்டும் போட்டிக்கு திரும்பும் ஷூமேக்கர்
மோட்டர் பந்தய போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றிருந்த ஜெர்மனியின் மோட்டார் கார் பந்தைய வீரரான மைக்கேல் ஷூமாக்கர், தான் அடுத்த ஆண்டு பார்முலா ஒன்று போட்டிகளில் மெர்சிடிஸ் அணிக்காக பங்கேற்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தான் முன்பு இருந்தது போலவே உறுதியுடன் இருப்பதாகவும் உலக சாம்பியன்ஷிப்பை பெற வேண்டும் என்று குறிவைத்துள்ளதாகவும் ஷிமாக்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுபற்றி தன்னிடம் இருந்த ஆவல் மீண்டும் அதிகமாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஷூமாக்கர் தனது முந்தைய அணித்தலைவர் ராஸ் பிரானுடன் மீண்டும் சேரவுள்ளார்.

இவர்கள் ஏழு உலகப் போட்டிகளை வென்றுள்னர். இதில் ஐந்து பெராரி அணிக்காக பங்கேற்றபோது பெற்ற வெற்றிகளாகும்.

செய்தியரங்கம்
போரின் இறுதி நாட்களில்
போரின் இறுதி நாட்களில்

இலங்கையில் போரின் போது மனிதப் பேரவலங்கள் இடம் பெற்றதாக எம்.எஸ்.எஃப் கூறுகிறது

உலகளவில் பல பகுதிகளில் இடம்பெற்ற போர்களின் போது மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (எம்.எஸ்.எஃப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஏமன், காங்கோ ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.

போர்களின் போது பொதுமக்கள் அவர்களுக்கான உயிர் காப்பு உதவிகளை பெறுவதில் இருந்து தடுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிரான்ஸை தளமாகக் கொண்டு செயற்படும் எம்.எஸ்.எஃப் என்னும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் உதவிகள் துண்டிக்கப்பட்டும், மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பராமரிப்புடனும் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இலங்கையில் போர் வேளையில் அந்தப் பகுதிக்கு செல்ல தாம் அனுமதிக்கப்பட வில்லை என்றும், போர் வலயத்ததுக்கு வெளியேயே தாம் பணிசெய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த வனசா வான் ஸ்கோர். அதனால் தாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் கூறினார்.

இது குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கில் கேட்கலாம்


கொழும்புக்கு வரும் தமிழர்கள் பொலிசாரிடம் பதிவு செய்யும் முறை தளர்த்தப்பட்டுள்ளது

கொழும்புக்கு செல்லும் தமிழர்களுக்கு கெடுபிடிகள் குறைக்கப்பட்டுள்ளன
கொழும்புக்கு செல்லும் தமிழர்களுக்கு கெடுபிடிகள் குறைக்கப்பட்டுள்ளன
இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வெளியிடங்களில் இருந்து வருகின்ற தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை தளர்த்தப்பட்டிருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பதிவு நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் மெதிவக்க அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகள் கொழும்பு பிரதேசத்தினுள் ஊடுருவி தாக்குதல்களை நடத்துவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தப் பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

இலங்கையின் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வருகின்ற தமிழ் மக்கள் உடனடியாகத் தம்மை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

இப்போது அவ்வாறு பதிவு செய்ய வேண்டியதில்லை என்றும், வெளியிடங்களில் இருந்து வருபவர்கள், ஒரு மாத காலத்திற்கு மேல் கொழும்பில் தங்கியிருக்க வேண்டுமானால், பொலிஸ் நிலையத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் மெதிவக்க அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

இந்தப் பதிவு நடவடிக்கை காரணமாக கொழும்பு செல்லும் தமிழ் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி

இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி
இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி
தமிழகத்தில் வந்தவாசி திருச்செந்தூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது.

திருச்செந்தூரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அ இ அ தி மு க வின் அம்மன் நாராயணை 46,861 வாக்குகள் வித்தியாசத்திலும், வந்தவாசியில் கமலக்கண்ணன் அ இ அ தி மு க வேட்பாளர் முனுசாமியை 38,017 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடித்தனர்.

இரு தொகுதிகளுலும், நடிகர் விஜயகாந்த்தின் தே மு தி க டெபாஸிட்டை இழந்தது. திமுக வந்தவாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது, திருச்செந்தூரை அ இ அ தி மு க விடமிருந்து கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றிகள் தனது அரசின் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார். அ இ அ தி மு க பொதுச் செயலர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் பார்த்த திமுக வுக்கு எதிரான அலையினை முடிவுகள் பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


தம்மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்கிறார் ஆர் கே பச்சௌரி

தம்மீது அபாண்டமான குற்றச்சாட்டு என்கிறார் பச்சௌரி
தம்மீது அபாண்டமான குற்றச்சாட்டு என்கிறார் பச்சௌரி
சண்டே டெலிகிராஃப் பத்திரிகை தமது தலைமை அதிகாரி ஆர் கே பச்சௌரி அவர்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, பொய்யானவை மற்றும் கடுமையானவை என்று, டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனமான டெரி எழுத்துபூர்வமாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆர் கே பச்சௌரி அவர்கள்தான் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின், அரசுகளுக்கு இடையேயான குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.

சண்டே டெலிகிராஃப் பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படி செய்யத் தவறினால், தேவையான நடவடிக்கைகள் என அந்த நிறுவனம் கூறும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

விரக்தியடைந்து வரும் சிலரால் வைக்கப்படும் இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று செய்தியாளர்களிடம் பேசிய பச்சௌரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates