
இலங்கை சிறைச்சாலைகளில் பல மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ்க் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்கிறார் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி. இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கை சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை நாமே அரசியல் கைதி என்கிறோம். அரசாங்கம் அவர்களை பயங்கரவாதிகளாகவே நோக்குகிறது. எனவே இவர்கள் தொடர்பில் உடனடியாக முடிவினை எடுப்பது சிரமமாக உள்ளது. தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலை, மகசின் சிறை, மட்டக்களப்பு, திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் தமிழ் கைதிகள் தடுப்புக் காவலில் உள்ளனர்.இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் அனைவரும் தனித்தனியே விசாரணை செய்யப்பட வேண்டும். அப்படி செய்து அறிக்கை பெறப்படும் விடத்தே இதற்கான தீர்வினை பெறலாம். நாட்டில் உள்ள குற்றங்களை தடுப்பது எப்படி என்ற நோக்கில் நாங்கள் ஒரு குழுவை (கமிட்டி) உருவாக்கி உள்ளோம். இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி இக்குழு கூடிய போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் பற்றி அறிவித்தேன். மீண்டும் எதிர்வரும் மாதத்தின் முதலாம் வாரம் இக்குழு கூடும். அதன் போது கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க உள்ளேன். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரணைக்குட்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கம். எனினும் கைதிகள் தொடர்பில் சரியான தகவல்கள் பெறப்பட வேண்டும். அப்போதே அவர்களை இலகுவாக விடுதலை செய்ய முடியும். இதுதவிர அரசாங்கம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பயங்கரவாதிகள் என கூறுவதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்வார்களானால் அவர்களால் சமூகத்திற்கு தீங்கு ஏற்படக் கூடும். நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்கிறது. எனவே இதற்கு நான் மறுப்பு கூற முடியாது. இன்றைய நிலையில் வவுனியா முகாம்களிலும் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்கள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்களாயின் அது ஜனாதிபதியினால் மட்டுமே முடியும். அதற்கு கைதிகள் மீதான விசாரணைகளை விரைவுப்படுத்த வேண்டும். மேலும் தனிப்பட்ட முறையில் எமது அமைச்சினால் மட்டும் எதுவித முடிவையும் எடுக்க முடியாது. காரணம் கைதிகள் மீதான விசாரணைகளை மேற்கொண்டு இது தொடர்பான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு நீதி அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே நாம் அவர்கள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்கிறார்
0 Response to "ஜனாதிபதியால் மட்டுமே பொதுமன்னிப்பு வழங்க முடியும்-பிரதி அமைசர் புத்திர சிகாமணி"
แสดงความคิดเห็น