சேற்றில் விளையாடினால் எலிக்காய்ச்சல் : வவுனியா சிறுவர்களின் நிலை...?

சேற்றில் விளையாடினால் எலிக் காய்ச்சல் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது. பாடசாலை விடுமுறைக் காலத்தில் சிறுவர்கள் சேற்று நிலங்களிலும் வயல்களில் பெற்றோருக்கு உதவியாக செயற்படும் போதும், சேற்றில் நடமாடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் எலிக் காய்ச்சல் சிறுவர்களுக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது எனவும் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் ஒரு சில மாதங்களில் மாத்திரம் எலிக் காய்ச்சல் என்ற லெப்டோஸ்பைரேசிஸ் என்ற நோய் 81 பேருக்கு ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இரண்டாயிரத்து 193 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொடர்பாக மக்களின் கவனமின்மை காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. சேறு சார்ந்த இடங்களில் பணியாற்றக் கூடியவர்கள் காய்ச்சல், வாந்தி, மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளை நாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. எது எப்படி இருந்த போதிலும் வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம் பிரதேசம் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக சேறு நிறைந்த பகுதியாக காட்சியளிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முகாமிலும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் போதிய சுகாதார வசதிகளற்ற நிலையில், தங்கியுள்ளனர். மழையினால் முகாம் பகுதியில் ஏற்படும் வெள்ளம், கழிவறை உள்ளிட்ட இடங்களில் புகுந்து ஏனைய இடங்களில் பரவியுள்ளதால், எலிக் காய்ச்சல் மாத்திரமல்ல, வேறு பல தொற்று நோய்கள் கூட ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







0 Response to "சேற்றில் விளையாடினால் எலிக்காய்ச்சல் : வவுனியா சிறுவர்களின் நிலை...?"
แสดงความคิดเห็น