மீள்குடியேற்றம் தொடர்பில் ரொபேர்ட் ப்ளேக் திருப்தியாம்
வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ப்ளேக் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.
நேற்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அவர் இதனைத் தெரிவித்ததாக அமைச்சு கூறுகிறது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, சாதகமான நிலைமையைப் பிரதிபலிப்பதாக ரொபேர்ட் ப்ளேக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் குறித்து திருப்தி வெளியிட்ட உதவி ராஜாங்கச் செயலாளர், இதற்காக அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமெனத் தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதுடன் அரசியல் செயற்பாட்டையும் துரிதப்படுத்துவதாகவும் இதற்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இச்சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த ரொபேர்ட் ப்ளேக் நேற்றுப் பிற்பகலில் ஜனாதிபதியுடனும் சினேகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அத்துடன் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்தார்.
இன்று அவர் பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்
0 Response to "மீள்குடியேற்றம் தொடர்பில் ரொபேர்ட் ப்ளேக் திருப்தியாம்"
แสดงความคิดเห็น